சென்னை கட்டட விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு– 61 ஆனது
சென்னை: சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 20 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போயுள்ளதால் அவர்களை அடையாளம் காண முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.
6வது நாளாக இன்றும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று 5-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. நேற்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை கட்டிட இடிபாடுகளில் இருந்து 4 ஆண் பிணங்கள் மீட்கப்பட்டன.
காலை 7.30 மணி அளவில் மேலும் ஒரு ஆண் பிணமும், 8.30 மணிக்கு இன்னொரு ஆண் பிணமும் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில், மதியம் 12.30 முதல் 12.40 மணி வரையிலான 10 நிமிடத்திற்குள் 5 பிணங்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன. மதியம் 1.30 மணி அளவில் ஒரு பெண் பிணமும் கண்டெடுக்கப்பட்டது.