விடுதலையான தமிழக மீனவர்கள் சென்னை வருகை: முதல்வரை சந்திக்க முடிவு?
சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் டெல்லியிலிருந்து விமானம் மூலம் நள்ளிரவு சென்னை வந்தனர்.
இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோர் புதன்கிழமை அன்று விடுவிக்கப்பட்டனர். பின்னர், டெல்லி அழைத்து வரப்பட்ட அவர்கள், வெளியுறவுத்துறை நடைமுறைகளை முடித்துக்கொண்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க 5 மீனவர்களையும் வரவேற்றனர். மேலும், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக அமைச்சர்கள், வளர்மதி, சுந்தரராஜ், ஜெயபால், ஆகியோர் மீனவர்களை நேரில் வரவேற்றனர்.
மீனவர்கள் 5 பேரும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.