பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய 5 பேர் பத்திரமாக மீட்பு !
பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே பூதூர் பகுதி பாலாற்று வெள்ளத்தில் ஒரு மூதாட்டி உள்பட 5 பேரை பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மதுராந்தகம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி, நேற்று பகல் ஆடு மாடுகளை ஓட்டிச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக பாலாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். இதைப் பார்த்த 4 இளைஞர்கள் வெள்ளத்தில் குதித்துச் சென்று மூதாட்டியைக் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால், அவர்களும் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர்கள் தண்ணீரின் நடுவே இருந்த ஒரு மணல் திட்டில் உயிருக்கு போராடி நின்று கொண்டிருந்தனர்.
இத் தகவல் கிடைத்ததும் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பாலாற்று வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய 5 பேரையும் பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.