இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!: நாகை மீனவர்கள் 50 பேர் சிறைபிடிப்பு
நாகை: நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் 50 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
நாகை மாவட்டம் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் 5 விசைப்படகுகள், 2 நாட்டு படகுகளில் இன்று அதிகாலை மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 50 மீனவர்களை சிறைபிடித்துள்ளனர்.
5 விசைப்படகுகள், 2 நாட்டுப்படகுகளுடன் நாகை மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து கொண்டு காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த இரு மாத காலத்தில் 258 மீனவர்கள், 57 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்டனர். இதில் 215 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் 43 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளதுடன், இவர்களது 55 படகுகளும் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், 55 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி அனைத்து மீனவர்களும் படகுகளில் வெள்ளை கொடி கட்டி கொண்டு இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டத்தை நடத்த போவதாக அறிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், நாகை மீனவர்கள் 50 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றிருப்பது மீனவர்களிடையே மேலும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.