மின்கட்டணம் 50 சதவீதத்தை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்தினால் போதும் - மின்வாரியம் அறிவிப்பு
சென்னை: வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மின்கட்டணம் 50 சதவீதத்தை ஜனவரி 31 - ஆம் தேதிக்குள் செலுத்தினால் போதும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மழை பாதித்த இடங்களில் மின்கட்டணம் செலுத்துவதில் உள்ள குழப்பத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மழை பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர் ஜனவரி 31-ஆம் தேதி வரை எவ்வித அபராதமும் இன்றி கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மின்சார பயன்பாட்டு அளவை கணக்கெடுக்காத பகுதிகளில் உள்ள மின்நுகர்வோர் முந்தைய மாதத்துக்கான கட்டணத்தை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என்று சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மழை பாதித்த இடங்களில் உள்ள வீடுகளிலும் மின்சார வாரிய ஊழியர்கள் நேரடியாகச் சென்று கணக்கெடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் மழை வெள்ளம் சூழந்ததால் பழுதான மீட்டர் பெட்டிகள், வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஊழியர்கள் செல்ல முடியாத இடங்களில் உள்ளவர்கள் ஆகியோர் முந்தைய மாதத்துக்கான கட்டணத்தில் 50 சதத்தை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்தினால் போதுமானது.
அதிக கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கணக்கெடுக்கும்போது கூடுதல் தொகை அதில் சரிசெய்யப்பட்டும். குறைவாக செலுத்தியிருந்தால் மீதம் உள்ள தொகை அடுத்த முறை சேர்த்து வசூலிக்கப்படும் எனவே 50 சதவீதம் கட்டணம் என்பது சலுகைக் கட்டணம் அல்ல. பின்வரும் மாதத்தில் மீதம் உள்ள தொகை வசூலிக்கப்பட்டுவிடும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications