நீட் கட்டாயத்தால் மற்றொரு ஷாக்.. மாநில பாடத்திட்டத்தில் படித்த 500 பேருக்கு மட்டுமே மருத்துவ சீட்?
சென்னை: நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கவுன்சலிங் நடைபெறவுள்ளதால், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற சுமார் 500 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு, நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நாளை தொடங்க உள்ள நிலையில், அதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
நேற்று உச்சநீதிமன்றத்தில் நீட் விதிவிலக்கு தொடர்பான வழக்கு நடைபெற்றபோது, நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

கவுன்சலிங்
தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் உடனடியாக மருத்துவ கவுன்சலிங்கை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் செப்டம்பர் 4ம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்கவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

மதிப்பெண் அடிப்படை
இந்நிலையில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இன்று காலை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. நீட் தேர்வு முடிவின்படி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவு. ஆனால் மதிப்பெண் அடிப்படையில் அம்மாணவர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

500 இடங்கள்தான்
அதனால், மொத்தமுள்ள 2,594 இடங்களில், 2ஆயிரத்திற்கும் அதிகமான இடங்கள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கே கிடைத்துள்ளது. சுமார் 500 பேர்தான் மாநில பாடத் திட்ட மாணவர்களாகும்.

தயார் ஆகவில்லை
மாநில பாடத் திட்ட மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தயாராகவில்லை என்பதால்தான் இந்த அளவுக்கு அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் தங்களுக்கு விலக்கு கிடைக்கும் என நம்பிக்கொண்டிருந்த மாணவர்கள் நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications