தவறாமல் மழை பெய்ய வேண்டும்... நாசரேத் கோவிலில் 504 திருவிளக்கு ஏற்றி பெண்கள் பூஜை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள நால்ஆல் வேம்படி சுடலைமாட சுவாமி-சக்தி அம்மன் கோவிலில் பருவமழை தவறாமல் பெய்யவேண்டி 504திருவிளக்கு பூஜை நடந்தது.
நாசரேத் அருகேயுள்ள சின்னமாடன்குடியிருப்பில் ஆன்மிக சிறப்பு வாய்ந்த நால்ஆல் வேம்படி சுடலைமாடசுவாமி-சக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கொடை விழா பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி இந்த ஆண்டிற்கான கொடை விழா கணபதி ஹோமம், கும்பாபிஷேகத்துடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து சாமி அழைப்பு, நாலாலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், சிறப்பு மலர் அலங்கார, ஆராதனைகளுடன் சாமக்கொடை, பொங்கல் விழாவுடன் சிறப்பாக நடந்தது.

மழை பெய்ய வேண்டி பூஜை
விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உலக மக்கள் நலமாக வாழவேண்டியும், தமிழகத்தில் பருவம் தவறாமல் மழை பெய்து, விவசாயம் செழித்து பசுமைவளம் சிறக்கவேண்டியும் 504திருவிளக்கு பூஜை நடந்தது.

பக்தர்களுக்குப் பிரசாதம்
விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தென்னகத்தில் வறட்சி
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெயரளவிற்கு கூட மழையில்லாத காரணத்தினால் வறட்சி தலைதூக்கியுள்ளது. வறட்சியின் காரணமாக கால்நடைகள் கூட உண்ண உணவின்றி தவித்து வருகின்றன.

நிலத்தடி நீரைக் காணலியே
ஆறு, குளம், குட்டைகள் வறண்டுவிட்டதால் நிலத்தடி நீர் வறண்டு குடிநீர் தட்டுப்பாடும் தலை விரித்தாடுகிறது.

கழுதைத் திருமணம்.. வேம்பு திருமணம்
இந்நிலையில் மழைபெய்யவேண்டி ஆங்காங்கே கழுதைகளுக்கு திருமணம், அரசு, வேம்பு மரங்களுக்கு திருமணமும் நடத்தப்பட்டு வருகிறது.

பெண்கள் நடத்திய திருவிளக்குப் பூஜை
இந்த வரிசையில் சின்னமாடன் குடியிருப்பு கிராமமக்கள் வேம்படி சுடலைமாடசுவாமி, சக்தி அம்மன் ஆலயத்தில் 504திருவிளக்கு பூஜை நடத்தியுள்ளனர். வருணபகவான் கருணை கொண்டு மழையாக பொழிந்து மக்களை மகிழ்வித்தால் சரிதான்.












Click it and Unblock the Notifications