தர்மபுரி: அரசு மருத்துவமனையில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து 6 பச்சிளம் குழந்தைகள் மரணம்
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனையில் 12 மணிநேரத்தில் 6 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலத்துறை சார்பில் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து வசதிகளுடன் இலவச ஆம்புலன்சும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் இருந்தும் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி முதல் இன்று அதிகாலை 7 மணி வரை 12 மணி நேரத்தில் பச்சிளங் குழந்தைகள் பிரிவில் இருந்த6 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
ஈச்சம்பட்டி, மருக்காளம்பட்டி, கோபிநாதம்பட்டி, பைசு அள்ளிபுதூர் மற்றும் ஓசூர், திருப்பத்தூர் ஆகிய ஊர்களை சேர்ந்த குழந்தைகள் இறந்து விட்டனர். சிகிச்சை பெற்று வந்த 6 குழந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications