ஒலிபெருக்கி பாடலால் கலவரம்... வீடுகளுக்குத் தீவைப்பு.. மதுரை அருகே பரபரப்பு
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை என்ற கிராமத்தில் ஒலிபெருக்கியில் போடப்பட்ட பாடல் தொடர்பாக இரு தரப்புக்கு இடையே பெரும் மோதல் வெடித்தது. இதில் குடிசை வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது. போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொங்கல் விழா வழக்கத்தை விட உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதேபோல குருவித்துறையிலும் ஊர் மக்களால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு தரப்பினர் ஒலிபெருக்கி வைத்து பாடல்கலை ஒலிபரப்பினர். இதுதொடர்பாக இன்னொரு தரப்புக்கும் இவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து ஒரு தரப்பைச் சேர்ந்த மூன்று பேரைப் பிடித்து மறு தரப்பினர் தாக்கியுள்ளனர். பின்னர் சமூக கூடத்திலும் அடைத்து வைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து மூன்று பேரையம் மீட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்தனர்.
இந்த நிலையில் தாக்கப்பட்டவர்கள் தரப்பினர் ஆவேசத்துடன் தாக்குதலில் குதித்தனர். இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. குடிசைகள் சிலவற்றுக்குத் தீவைக்கப்பட்டது. இந்த மோதலில் 3 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டதால் அவரை மதுரைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
நிலைமை மோசமடைந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். மாவட்ட எஸ்.பி. விஜேந்திர பிதாரியும் சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தினர். நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.