குடியால் வந்த விபரீதம்.. இரண்டு மகள்களுடன் தானும் கழுத்தறுத்துக் கொண்ட தந்தை!
காரைக்குடி: காரைக்குடியில் குடியால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் பெற்ற இரு மகள்களையும் கழுத்தறுத்து, தன்னையும் அறுத்துக் கொண்ட தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அம்பாள்புரம் நெடுங்குடி கிராமத்தில் பன்னீர்செல்வம் வசித்து வருகிறார். இவரது மனைவி இராக்கம்மாள். இவர்களுக்கு கலைவாணி, கனிமொழி என்று இரண்டு மகள்கள் உள்ளன. இவர் குடி போதைக்கு அடிமையானவர். இவர் குடியை மறக்க கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மறுபடியும் குடிக்க ஆரம்பித்ததால் இவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. நேற்று இரவு போதையில் காலதாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் இவருக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.
இன்று அதிகாலை இவரது மனைவி எழுந்து பால் கறப்பதற்காக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சுமார் 5 மணி அளவில் மகள் கலைவாணி கத்தி குத்துடன் கதறியபடி வெளியே வந்துள்ளார். மேலும் அம்மாவிடம், அப்பா கத்தியை எடுத்து குத்திவிட்டார் என்றும் கூறியுள்ளார்.
இராக்கம்மாள் பதறிப்போய் உள்ளே சென்ற போது அவரது மகள் கனிமொழி கழுத்தருக்கப்பட்ட நிலையிலும், பன்னீரும் கழுத்தருக்கப்பட்ட நிலையிலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக காரைக்குடி வந்துள்ளனர். இதில் கனிமொழி சிகிச்சை பலனின்றி இறந்தார். கலைவாணி, பன்னீர்செல்வம் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இது குறித்து திருமயம் காவல் ஆய்வாளர் க.கருணாகரன் புலன் விசாரணை செய்து வருகிறார். குடிபோதையில் பெற்ற மகள்களையே கழுத்தறுத்த சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications