கொடுமை.. 50 வயது மருமகளிடம் பாலியல் தொந்தரவு செய்த 70 வயது மாமனார்... அடித்துக் கொலை!
கடலூர்: கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் 50 வயதான மருமகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்த 70 வயது மாமானாரை மருமகள் கட்டையால் அடித்துக் கொன்று விட்டார். அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், வளையமாதேவியைச் சேர்ந்தவர் கந்தசாமி (70). இவரது மகன் அன்பழகன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (50). சில வருடங்களுக்கு முன்பு அன்பழகன் இறந்து போனார். தனது மகன், மகளுடன் மாமனார் கந்தசாமி வீட்டில் வசித்து வருகிறார் தமிழ்ச்செல்வி.
கந்தசாமி கடந்த 30ம் தேதி சாலையோரம் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது சாலை விபத்து என்று நினைத்து வழக்குப்பதிவு செய்தது சேத்தியாதோப்பு போலீஸ். ஆனால் இது விபத்து அல்ல. இவரது சாவில் மர்மம் உள்ளது என்று கந்தசாமியின் உறவினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் தமிழ்ச்செல்வி, தனது மாமனாரின் அண்ணன் மகன் வேல்முருகனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து தமிழ்ச்செல்வியைப் பிடித்து போலீஸார் கைது செய்தனர். அவர் போலீஸாரிடம் கூறுகையில், கந்தசாமி அவ்வப்போது மது அருந்தி வந்து பாலியல் தொந்தரவு செய்து வந்தார். கடந்த 30ம் தேதி தொந்தரவு அதிகரித்தது. அப்போது வீட்டில் இருந்த கட்டையால் அடித்து விட்டேன். இதில் கந்தசாமி உயிரிழந்தார். இதையடுத்து கந்தசாமியின் அண்ணன் மகன் வேல்முருகனிடம் விஷயத்தை சொல்லி ஆலோசனை கேட்டேன்.
அவர் விரைந்து வந்தார். இருவரும் சேர்ந்து நள்ளிரவில் சாலையோரம் விபத்தில் அடிபட்டு இறந்தது போல உடலைப் போட்டோம். மருமகள் என்றும் பாராமல் என்னிடம் தொடர்ந்து சில்மிஷம் செய்து வந்தார். என்னைக் காப்பாற்றிக கொள்ள எனக்கு வழி தெரியவில்லை. எனவேதான் கட்டையால் அடித்தேன். அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளார் தமிழச்செல்வி.