சுதந்திர தினவிழா கோலாகலம்.... அறிவாலயம், கமலாலயம் உள்ளிட்ட கட்சி அலுவலகங்களில் கொடியேற்றம்!
சென்னை: நாட்டின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில்அரசியல் கட்சிகளின் சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
இந்தியா முழுவதும் இன்று 70-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் தங்களது தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
தமிழக அரசின் சார்பில் நாட்டின் 70-வது சுதந்திர தின விழா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக
இன்று காலை திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் திமுகவின் துணைப் பொதுச் செயலர் வி.பி.துரைசாமி கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இதில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தேமுதிக தலைமைக் கழகம்
சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் தேமுதிக விஜயகாந்த் தேசியக்கொடியேற்றி வைத்தார். அப்போது, மாணவர்களுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி, அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

பாஜக தலைமை அலுவலகம்
தமிழ்நாடு பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ஜ.க பொதுச் செயலாளர் ராம் மாதவ் கொடியேற்றினார். இதில், மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில், தேசிய கொடியை சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யா ஏற்றி வைத்தார்.












Click it and Unblock the Notifications