சென்னை ஷோரூமில் கொள்ளையடிக்கப்பட்ட ஹூண்டாய் கார்கள்... 7வது காரும் மீட்கப்பட்டது
சென்னை: சென்னை மணப்பாக்கத்தில் ஹூண்டாய் கார் ஷோரூமியின் யார்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 7 கார்களில் 6 கார்கள் மீட்கப்பட்டு விட்ட நிலையில் இன்று 7வது காரையும் போலீஸார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
சென்னை மணப்பாக்கம் பகுதியில் ஹூண்டாய் கார் நிறுவன ஷோரூம் உள்ளது. இங்கு கார்களை நிறுத்த தனியாக அருகிலேயே யார்டு உள்ளது. அங்கு மனோகரன் என்பவர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் 20 பேர் கொண்ட கும்பல் அங்கு நுழைந்துள்ளது. காவலாளியை தாக்கி காயப்டுத்தி கட்டிப் போட்ட அவர்கள் உள்ளே புகுந்து 7 புதிய கார்களை எடுத்துக் கொண்டு தப்பினர்.
அதிர்ச்சி அடைந்த மனோகரன் ஷோரூம் நிர்வாகிகளுக்கும், போலீஸுக்கும் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட கார்களில் 5 கார்கள் வளசரவாக்கம் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்து போலீஸார் அங்கு விரைந்தனர்.
அங்கு போலியான நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்ட நிலையில் அந்தக் கார்கள் இருந்தன. அக்கார்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்டது. மற்ற இரண்டு கார்களையும் கண்டுபிடிக்க வலை வீசப்பட்டது. இந்த நிலையில் 6வது கார் நேற்று மதுரவாயல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று கோடம்பாக்கம் பகுதியில் 7வது காரும் சிக்கியது. அதையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, இந்தக் கார்களில் பொருத்தப்பட்ட போலி நம்பர் பிளேட்டுகள் ஒரு ஸ்டிக்கர் கடையில் வாங்கப்பட்டது தெரிய வந்தது. அந்தக் கடையைக் கண்டுபிடித்த போலீஸார் அங்கு போய் விசாரணை நடத்தினர். அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமராவில் அங்கு வந்த கொள்ளையர்களின் படங்கள் பதிவாகியுள்ளன. 10 பேர் வந்ததும் தெரிய வந்தது.
இதேபோல் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வளசரவாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவில் இருந்த கண்காணிப்பு கேமராவிலும் கொள்ளையர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளது. அதில் காரை நிறுத்தி விட்டு மர்மநபர்கள் 5 பேர் கீழே இறங்கி வரும் காட்சி பதிவாகி உள்ளது. இதே நபர்கள் நம்பர் பிளேட் ஸ்டிக்கர் கடையில் இருந்து வெளியே வரும் காட்சி, அங்கிருந்த கேமராவில் பதிவாகி உள்ளனர். எனவே கார் கடத்தலில் ஈடுபட்டதும், போலி நம்பர் பிளேட் தயாரித்ததும் ஒரே கும்பல்தான் என்பது உறுதியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.