இரும்பு திருட வந்த இளைஞர் அடித்துக் கொலை... 8 என்எல்சி பாதுகாப்பு படை வீரர்கள் கைது
நெய்வேலி: நெய்வேலியில் இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்றதாக என்.எல்.சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்(என்.எல்.சி.) 2-வது சுரங்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஓடை வழியாக வடலூர் அருகே மேலகொளக்குடி பெரிய ஏரிக்கு வருகிறது. இந்த ஏரியில் கடந்த 29-ந் தேதி 24 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த இளைஞர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், சடலமாக மீட்கப் பட்ட இளைஞர் நெய்வேலி மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராஜா மகன் கோட்டான் என்கிற ரகு(24) என்பது தெரிய வந்தது. மேலும், பிரேத பரிசோதனையில் ரகு அடித்துக் கொலை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
அதாவது சம்பவத்தன்று ரகு தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து என்.எல்.சி. 2-வது சுரங்கப்பகுதியில் இரும்பு பொருட்களை திருட சென்றுள்ளார். அப்போது மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் ரகுவை சுற்றி வளைத்து பிடித்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்து தகராறு செய்த ரகுவை, பாதுகாப்பு படை வீரர்கள் அடித்துள்ளனர். இதில் பரிதாபமாக ரகு உயிரிழந்துள்ளார். ரகுவின் உடலை பாதுகாப்பு படை வீரர்கள் 2-வது சுரங்க நீர் வெளியேறும் ஓடையில் வீசியுள்ளனர். அது, அங்கிருந்து பெரிய ஏரி பகுதிக்கு அடித்து வரப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரவியைக் கொலை செய்த பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின் விபரமாவது, கோரேந்திரசிங்(27), ரவிபிரணாப்சிங்(24), ரவிந்திரர்(24), பிரியானகனவன்(24), தேவேந்திரன்(51), சந்தோஷ்கர்ணா (35), ஆசைத்தம்பி (30), கிருஷ்ணராவ்(27).
மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களே இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவம் நெய்வேலி பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு என்எல்சிக்குள் நடந்த ஒரு சம்பவத்தின்போது மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பரிதாபமாக கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இப்போது இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications