திருச்சி அருகே பயங்கரம்.. கார்-லாரி மோதியதில் 8 பேர் பலி.. 4 பேர் படுகாயம்
கார்-லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி: திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 குழந்தைகளும் அடங்கும். மேலும் 4 பேர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து திருச்சி நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 12 பேர் பயணம் செய்தனர். சமயபுரம் சுங்கச்சாவடி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
லாரி மீது மோதியது
அதனால் தறிகெட்டு சாலையில் இங்குமங்கும் ஓடியது. அப்போது, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து ஸ்டீல் லோடு ஏற்றிய லாரி அங்கு நின்று கொண்டிருந்தது. அந்த லாரி மீது வேகமாக வந்த கார் பலமாக மோதியது.
8 பேர் பலி
இதில் கார்பயங்கர சத்தத்துடன் சுக்குநூறாக நொறுங்கியது. காருக்குள் 2 குழந்தைகள், பெண்கள் என 8 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் தங்கலட்சுமி, ஜெயஸ்ரீ, கவிதா உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
விபத்து நிகழ்ந்த இடத்தில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிருக்கு போராடியவர்களை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தீவிர சிகிச்சை
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும் அவர்களது நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிரைவர் தூங்கிவிட்டார்
8 பேரை பலி கொண்ட கோர விபத்து இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது. இந்த டோல்கேட் பகுதியில் இரவு நேரத்தில் விளக்குகள் எரிவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அதே பகுதியில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்துவதால்தான் லோடு வாகனங்கள் இந்த இடத்தில் வழக்கமாக நிறுத்தப்படுகின்றன என்றும் அதனால்தான் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அது மட்டுமல்லாமல் இன்று அதிகாலை காரை ஓட்டி வந்தவர் நல்ல தூக்க கலக்கத்தில் இருந்துள்ளார். இதுவும் விபத்துக்கு முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.