இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்.. தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
இராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் 13 பேரை இன்று காலை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற நிலையில், தற்போது பாம்பன் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. இச்சம்பவம் மீனவ மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இரவில் கச்சத்தீவு பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி மீனவர்களின் படகுகளை வழிமறித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும் வெட்டி கடலில் போட்டுள்ளனர். கடற்படையினரின் செயலை பார்த்த மீனவர்கள் அவசரமாக அங்கிருந்து படகுகளை திருப்பி வேறு பகுதிக்கு சென்றனர். தமிழக மீனவர்களின் படகுகளை துரத்தி சென்ற கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை படகுடன் சிறைப்பிடித்துச் சென்றனர்.
இதேபோல நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் அதே பகுதியில் மீன்பிடித்திருக்கின்றனர். அப்போது அவர்களையும் சேர்த்து இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 2 விசைப் படகுகளுடன் 13 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர்.
விசாரணைக்கு பிறகு அவர்கள் அனைவரும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாம்பன் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை கடற்படையினர் ஒரே நாளில் 21 மீனவர்களையும், இரண்டு படகுகளையும் சிறைப்பிடித்து சென்ற சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.