விபத்தில் சிக்கிய 4 பேருக்கு உதவி செய்த போலீசார் உட்பட 8 பேர் லாரி மோதி பரிதாப பலி!
சென்னை: சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றப் போன 8 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை ஆலக்குப்பம் பகுதியில் புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கார் மீது நள்ளிரவு லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரோந்துப் பணி போலீசார் விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு விபத்துக்குள்ளான காரையும், லாரியையும் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில், புதுச்சேரியில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் கேரளா சென்ற ஒரு லாரி போக்குவரத்தை சீர் செய்துக் கொண்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக மோதி சென்றது. அந்த லாரி மோதிய வேகத்தில் அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் நாலபுறமும் தூக்கி வீசப்பட்டு சிதறி விழுந்தனர்.
இந்த கொடுமையான விபத்தில் மரக்காணம் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா, தனிப்பிரிவு தலைமைக்காவலர் ஆறுமுகம், ரோந்துக்காவலர் தவசி, டோல் கேட் ஆம்புலன்ஸ் டிரைவர் சேகர், கார் ஓட்டுனர் சங்கர், மரக்காணத்தை சேர்ந்த சுரேஷ், காளிதாஸ், சென்னையை சேர்ந்த விஜயா உள்ளிட்ட எட்டு பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் எஸ்.பி.நரேந்திரன் நாயர் விபத்து குறித்து விசாரித்ததுடன் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற மீன் ஏற்றி வந்த லாரியை போலீசார் சுமார் 2 கி.மீ துரத்தி சென்று பிடித்து அந்த லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றப் போய் போலீசாரும், பொதுமக்களும் உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications