தொடர்கதையாகி வரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்... ஒரே நாளில் 16 மீனவர்கள் கைது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேரை ஒரே நாள் இரவில் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கோடியக்கரை/ராமேஸ்வரம்: பாரம்பரிய மீன்பிடி உரிமையுள்ள பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளது.
வங்க கடலில் ஒரு படகில் 8 மீனவர்கள்இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கைது செய்தனர். பின்னர் அவர்களது படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் 8 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 ராமேஸ்வரம் மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரும் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஒரே நாள் இரவில் 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 நாள்களுக்கு முன்பு தமிழக எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பிரிட்ஜோ என்ற மீனவரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசு உறுதியளித்த நிலையில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம் தொடருகிறது.