8 ஆம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை – உறவினர்கள் அதிர்ச்சி
சென்னை : சென்னையைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த ஊரப்பாக்கம், காயத்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன்.
இவர் ஆதனூர் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். இவருடைய மகன் தமிழரசு.
பள்ளி நிர்வாகம் கண்டிப்பு:
இவர் கூடுவாஞ்சேரி அருள்நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகம் தமிழரசுவின் தந்தையை நேரில் அழைத்து உங்கள் மகன் சரியாக படிக்கவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.
தூக்கு போட்டு தற்கொலை:
இந்த நிலையில் மாணவன் தமிழரசு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கூடுவாஞ்சேரி போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர்கள் முற்றுகை:
இந்த நிலையில் தமிழரசுவின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம் என்று கூறி நேற்று காலை 10 மணி அளவில் மாணவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் பேச்சுவார்த்தை:
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஒட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நடவடிக்கைக்கு கோரிக்கை:
மாணவன் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள்தான் காரணம் என குற்றம் சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கலைந்த முற்றுகையாளர்கள்:
அதற்கு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை பள்ளி நிர்வாகம் மீது தவறு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.