மோடியின் உறுதிமொழி ஈழத் தமிழர் காதுகளில் தேனைப் பாய்ச்சுகிறது - ஏ.சி.சண்முகம்
சென்னை: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழி வார்த்தைகள் இலங்கைத் தமிழர்களின் காதுகளில் தேனாக பாய்ந்திருக்கும் என்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசியபோது இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கிட இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை தமிழர் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை உன்னிப்பாகவும், பரிவுடனும் கேட்டறிந்தார் என்னும் செய்தி, தமிழினத்திற்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற இந்தியா துணை நிற்கும் என்று உறுதியாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழனமே நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.
தங்களுக்கு என்று நிரந்தர விடியல் கிடைக்கும் என்று ஏங்கி கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களின் செவிகளில் பிரதமர் மோடியின் உறுதிமொழி இன்பத்தேனாக பாய்ந்திருக்கும் என்பதில் வியப்பில்லை.
இலங்கை அரசியல் சாசனத்தின் 13 ஆவது திருத்தத்தை இரு பிரிவினருக்கும் ஏற்கும் வகையில் அரசியல் தீர்வை காண தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், வடகிழக்கு பகுதியில் மறு சீரமைப்பு, மீன்குடி அமர்வு, மறுவாழ்வு ஆகியவற்றிற்கு இந்தியா தொடர்ந்து உதவும் என்று அறிவித்துள்ள பிரதமர் மோடியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
இலங்கை தமிழரின் துயரை கண்டு வாடியதோடு மட்டுமின்றி, அத்துயரை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
துன்பக் கடலில் மூழ்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு கலங்கரை விளக்கமாக அவர்களின் எதிர்கால வாழ்வின் நம்பிக்கை நட்சத்திரமாக பிரதமர் மோடி திகழ்கின்றார்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications