காதல் மனைவிக்கு கருக்கலைப்பு.. 2வது மனைவியுடன் உல்லாசம்.. ஆம்பூர் போலீசின் அட்டூழியம்.. "அம்பலம்"
காதல் மனைவி ரம்யாவுக்கு இரண்டு முறை கருக்கலைப்பு செய்துவிட்டு மற்றொரு பெண்ணை ஜெய்கணேஷ் திருமணம் செய்திருக்கிறார்.
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துவிட்டு அவருக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணை திருமணம் செய்த ஆயுதப்படை காவலருக்கு எதிராக முதல் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கீழ்முருங்கை கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவர் சென்னை ஆவடியில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சில நாட்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அங்கு பணியாற்றிய செவிலியர் ரம்யா என்பவருக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பு நாட்கள் போக போக காதலாக மாறியிருக்கிறது. ஜெய்கணேஷ் தன்னுடைய காதலை ரம்யாவிடம் சொல்ல ரம்யாவும் இதனை ஏற்றுக்கொள்ள இருவரும் சுமார் 7 ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருவர் வீட்டிலும் அணுகியுள்ளனர். ஆனால் இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எவ்வளவு பேசி பார்த்தும் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை.
நான் ஜெயலலிதாவின் அண்ணன் மகன்! பாலிவுட் நடிகையிடம் பீலா விட்ட சுகேஷ் சந்திரசேகர்.. அதுவும் திகாரில்!
முதல் கருக்கலைப்பு
எனவே கடந்த 2016ம் ஆண்டு திருப்பதியில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தையடுத்து இருவரும் சென்னையிலேயே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் ரம்யா கருத்தரித்துள்ளார். இதையறிந்த ஜெய்கணேஷ், இருவர் வீட்டின் சம்மதத்தோடு நாம் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. எனவே இருவர் வீட்டின் சம்மதத்தோடாவது குழந்தை பெற்றுக்கொள்வோம் என்று கூறியுள்ளார். மட்டுமல்லாது இந்த கருவை கலைக்க கருக்கலைப்பு மருந்துகளை வாங்கி கொடுத்துள்ளார். ஜெய்கணேஷ் எதிர்பார்த்ததைப்போல கரு கலைந்திருக்கிறது.
மற்றொரு காதல்
ஆனால் இந்த சோகத்தை ரம்யாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நிலைமை இப்படி இருக்கையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த வனிதா என்ற பெண்ணுடன் ஜெய்கணேஷுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதுவும் வழக்கம்போல வாட்ஸ்அப் சேட்டிங்கில் தொடங்கி வீடியோ கால் வரை சென்றுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணிடமும் ஜெய்கணேஷ் காதலை சொல்ல, அவரும் அதற்கு ஓகே சொல்ல இருவரும் சில காலம் காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் முதல் மனைவி ரம்யாவுக்கு தெரியவில்லை. ஆனால் ரம்யா இதற்கிடையில் இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறார். இந்த விஷயத்தை ஜெய்கணேஷால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இரண்டாவது கருகலைப்பு
முதல் முறை செய்ததது போலவே ரம்யாவிடம் ஜெய்கனேஷ் நைசாக பேசி பார்த்துள்ளார். ஆனால் இம்முறை குழந்தை பெற்றுக்கொள்வதில் ரம்யா உறுதியோடு இருந்திருக்கிறார். எனவே இந்த முறை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்துள்ளார் கணேஷ். இரண்டு முறையும் கருப்பலைப்பு செய்யப்பட்டதால் உடலளவிலும் மனதளவிலும் ரம்யா பலவீனமாக இருக்கையில் இதனை பயன்படுத்தி கரூர் பெண் வனிதாவை கடந்த நவம்பரில் திருமணம் செய்திருக்கிறார் ஜெய்கணேஷ். இதனையறிந்து உடைந்துபோன ரம்யா ஜெய்கணேஷுக்கு எதிராக ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
மீண்டும் திருமணம்
விசாரணையில் ரம்யாவை மீண்டும் திருமணம் செய்துகொள்வதாக காவல்துறையினர் முன்னிலையில் ஜெய்கணேஷ் பத்திரம் எழுதி கொடுத்திருக்கிறார். இதனையடுத்து பிரச்னை ஒரளவு தீர்ந்திருக்கிறது. ஏறத்தாழ இரண்டு மாத காலம் எந்த சண்டையும் இல்லாமல் சென்றுக்கொண்டிருந்த நிலையில், திடீரென நேற்று வனிதாவை ஜெய்கணேஷ் கீழ்முருங்கை கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். இதனை எதிர்பார்க்காத ரம்யா ஏமாற்றமடைந்து அவரது வீட்டின் முன்னாள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டிருக்கிறார்.
தேடுதல்
இதனை சகித்துக்கொள்ள முடியாத ஜெய்கணேஷும், அவரது தந்தையும் ரம்யாவை விரட்ட முயன்றுள்ளனர். ஆனால் ரம்யா அங்கிருந்து செல்லாததால் இருவரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து ரம்யாவை அங்கிருந்து மீட்ட ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் தலைமறைவாக உள்ள ஜெய்கணேஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.