5,000 போலி சான்றிதழ்கள்! 'டுபாக்கூர் சர்ட்டிபிகேட் நிறுவன' சிதம்பரம் தீட்சிதர் உட்பட 2 பேர் கைது!
சிதம்பரம்: பிரபல பல்கலைக் கழகங்களின் பெயரில் போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்ததாக சிதம்பரம் தீட்சிதர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களின் பெயரிலான போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலி சான்றிதழ்களை கன கச்சிதமாக தயாரிப்பதையே ஒரு நிறுவனம் போல இருவரும் நடத்தியதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் அருகே பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்கள் சாலை ஓரத்தில் குவியல் குவியலாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிதம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சிதம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிதம்பரம் தீட்சிதர் சங்கர், மீதகுடி நாகப்பன் ஆகியோர் Fake certificates case:
போலி சான்றிதழ்கள் தயாரிப்பதாகவும் அவர்களே இந்த சான்றிதழ்களை சாலையில் வீசி இருக்கலாம் என்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தீட்சிதர் சங்கரையும் நாகப்பனையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இருவரிடம் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களும் கைப்பற்றப்பட்டன. போலி சான்றிதழ்கள் தயாரிப்பை ஒரு நிறுவனம் போலவே சங்கர் தீட்சிதரும் நாகப்பனும் செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போலி சான்றிதழ் தயாரிப்புக்கான லேப்டாப், கம்ப்யூட்டர்கள், ஜெராக்ஸ் இயந்திரங்கள் ஆகியவற்றையும் சிதம்பரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தற்போது இந்த இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 5,000க்கும் அதிகமானோருக்கு போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உட்பட தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களின் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களின் பெயரிலும் இந்த கும்பல் போலி சான்றிதழ்களை தயாரித்தாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்த போலி சான்றிதழ் தயாரிப்பின் நெட் ஒர்க் குறித்தும் துருவித் துருவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications