கர்நாடகாவை சேர்ந்தவர் தமிழக முதல்வர்.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் சாருஹாசன்
தமிழகத்தின் அடுத்த முதல்வர் குறித்த சாருஹாசன் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகாவுக்கும் மத்திய அரசுக்கும் எதிராகவும் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என நடிகர் சாருஹாசன் பேசியிருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழக அரசியலில் இப்போது தடியெடுத்தவர்கள் எல்லாம் பெருந்தனக்காரர்களாகிவிட்டனர். இதுநாள் வரை வாய் மூடி மவுனிகளாக இருந்தவர்கள் திடீரென அரசியல் ஞானியாகிவிடுகிறார்கள்.

இந்த புதிய புத்தர்களுக்கு எந்த போதி மரம் ஞானத்தைத் தருகிறது என்பதுதான் புரிபடாத ஒன்றாக இருக்கிறது. இந்த திடீர் அரசியல் மேதாவிகளில் ஒருவர் நடிகர் சாருஹாசன்.
கடந்த சில மாதங்களாக கருத்து கந்தசாமியாகத்தான் பேசி வருகிறார் சாருஹாசன். சொந்த தம்பி கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தை ஏதோ தீக்குழிக்குள் தள்ளிவிட்டதைப் போல அசூயையாக பார்க்கிறார் சாருஹாசன்.
அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்தை உச்சந்தலையில் வைத்து சாருஹாசன் கொண்டாடி வருகிறார். ஆன்மீக அரசியலை பேசும் ரஜினிகாந்தை பாஜகவின் முகமூடி என விமர்சிக்கிறவர்கள் உண்டு. ரஜினிகாந்த், பாஜக, சாருஹாசன் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது ஒன்றும் பேரதிர்ச்சியும் இல்லைதான்.
இப்போது தமிழர்களது தன்மானத்தை சீண்டும் வகையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என ஆரூடமாக அடித்துவிட்டுள்ளார் அரசியல் அதிமேதாவி சாருஹாசன். காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகா மீது கடும் கொதிப்புடன் இருக்கிறது தமிழகம்.
காவிரி பிரச்சனையில் தமிழர்களை தாக்குவது, தமிழர் பொருளாதாரத்தை திட்டமிட்டு தீக்கிரையாக்குவது என்பது கர்நாடகாவில் தொடர் நிகழ்வாக இருக்கிறது. இப்படியான நிலையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர்தான் என சாருஹாசன் பேசிமுட்டுக் கொடுப்பது யாருக்கு?
கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட கமல்ஹாசனுக்காக? அல்லது மகாராஷ்டிராவில் இருந்து கிளம்பி கர்நாடகாவில் குடியேறி தமிழகத்தின் முதல்வர் கனவில் மிதக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு முட்டுக் கொடுக்கவா? இப்படியான முட்டுக் கொடுத்தல் பாட்சாக்கள் தமிழர்களிடம் ஒருபோதும் எடுபடப் போவது இல்லை.
தமிழகத்தின் அரசியல் கள நிலவரம் ஒரே இரவில் அடியோடு மாறிப் போய்விடவும் இல்லை. திமுக, அதிமுகவுக்கான வாக்கு சதவீதங்களில் ஏற்ற இறக்கம் இருக்கலாம்.
அப்படியே திரிபுராவில் காங்கிரஸ் கட்சியை கபளீகரம் செய்து பாஜகவாக உருமாற்றிக் கொண்ட மேஜிக்குகள் தமிழகத்தில் எந்த புதிய கொம்பர்களாலும் நடத்த முடியாது. இந்த அடிப்படை யதார்த்தத்தைக் கூட புரிந்து கொள்ளாமல் சாருஹாசான் வகையறா உளறல் திலகங்கள் எதை தின்றால் பித்தம் தெளியும் என தரையில் படுத்து உருண்டு புரளுவது பரிதாபமாகத்தான் இருக்கிறது!












Click it and Unblock the Notifications