தூக்கத்தில் எழுந்து அம்மாவை தேடிய 4வயது பெண் குழந்தை.. 7வது மாடி பால்கனியில் இருந்து விழுந்து பலி
சென்னை சூளைமேட்டில் 7வது மாடி பால்கனியில் இருந்து விழுந்த 4 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சூளைமேட்டில் 7வது மாடி பால்கனியில் இருந்து விழுந்த 4 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேட்டில் சித்ரா அவென்யூ என்ற அடுக்கு மாடிக் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் உரிமையாளரான கிருஷ்ணமூர்த்தி 7-வது தளத்தில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தில் பணிபுரியும் நேபாளத்தைச் சேர்ந்த கோபால் என்பவர் பணிபுரிந்து வருகிறார். கோபால் தனது மனைவி கீதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அலுவலகத்திலேயே ஒரு பகுதியில் தங்கியுள்ளார்.
பால்கனி
குடியிருப்பின் பிற வீடுகளின் பால்கனிகளில் முறையான தடுப்புக் கம்பிகள் உள்ள நிலையில் இது அலுவலகம் என்பதால் முறையான தடுப்புக் கம்பிகள் இல்லை எனக் கூறப்படுகிறது.
அம்மாவை தேடிய குழந்தை
இந்நிலையில் நேற்று இரவு கீதா 4 வயது குழந்தையை தூங்க வைத்துவிட்டு கைக்குழந்தையுடன் கீழ் தளத்துக்கு வந்துள்ளார். அப்போது கண்விழித்த 4 வயது குழந்தை சாரதா அம்மாவை தேடியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
அம்மாவை தேடி பால்கனி பகுதிக்குச் சென்ற சாரதா அங்கிருந்து எட்டிப்பார்த்தபோது திடீரென தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குழந்தை பலி
ஆனால் குழந்தை சாரதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.