ஏன்.. ஏன்யா இப்படி? கூகுள் மேப்பால் குடும்பத்துக்குள் தினந்தோறும் அதகளமாம்- போலீசில் விநோத புகார்
மயிலாடுதுறை: கூகுள் மேப் நமது குடும்பங்களில் வெட்டு குத்து வர காரணமாக இருக்கும் என நினைத்து பார்த்திருப்பீர்களா? இப்படி ஒரு சம்பவம் மயிலாடுதுறையையே பரபரக்க வைத்து கொண்டிருக்கிறது.
Recommended Video
மயிலாடுதுறை பெரிய கடை வீதியில் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறவர் சந்திர சேகர். இவர்தான் இப்போது கூகுள் மேப் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.

கூகுள் மேப் சந்தேகம்
சந்திரசேகரன் வீடு திரும்பியதும் அவர் எங்கே போனார்- வந்தார் என அவரது மொபைலில் உள்ள கூகுள் மேப் டைம் லைனை ஆராய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் மனைவி. இது தொடர்பான சில கேள்விகளையும் சந்திரசேகரிடம் மனைவி கேட்டிருக்கிறார். ஆரம்பத்தில் விசாரிக்க தொடங்கி இது சந்தேகத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறது.

நித்தம் நித்தம் தகராறு
சந்திரசேகர் தந்த பதில்களால் மனைவி திருப்தி அடையவில்லை. இதனால் கூகுள் மேப்பை காரணமாக வைத்து சந்திரசேகர் வீட்டில் நாள்தோறும் தினம் தினம் பிரளயமே நடந்து வந்திருக்கிறது. இதை ஒருவழியாக சமாளித்திருக்கிறார் சந்திரசேகர். மரம் அமைதியாக இருந்தாலும் காற்று சும்மா விடுமா என்ன?

உறவுகளின் பஞ்சாயத்து
இதன் உச்சகட்டமாக தமது கணவர் எங்கெங்கோ செல்கிறார்- கூகுள் மேப் பொய் சொல்லுமா? ஆதாரமாக இருக்கிறது என தந்தி அடிக்காத குறையாத சொந்த பந்தங்களுக்கு ஓலை அனுப்பிவிட்டார் மனைவி. அப்புறம் என்ன? முதல் மரியாதை படத்தில் பஞ்சாயத்துக்கு என கூடிய மீசைக்கார சொந்தங்கள் போல சந்திரசேகரனுக்கு குடைச்சல் அதிகரித்திருக்கிறது.

போலீசில் புகார்
இதனால் வெறுத்துப் போனார் சந்திரசேகரன். தமது குடும்ப வாழ்க்கையில் இப்படி குண்டை தூக்கி வீசிவிட்டதே கூகுள் மேப் என நொந்து போனார்.. அதற்காக முடங்கிக் கிடக்கவில்லை சந்திரசேகர். கூகுள் மேப் எப்படியெல்லாம் தவறாக வழிகாட்டுகிறது என புள்ளி விவரத்துடன் போலீஸ் ஸ்டேஷன் படியேறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications