அதிகாலையில் எழுந்த அன்னகிளி.. மகள் மஞ்சுளா மீது கல்லை தூக்கி போட்டு.. போலீசிடம் போய்.. ஷாக் காரணம்
திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல் நிலையத்திற்கு வந்த 55 வயது மூதாட்டி தனது மகளின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்றுவிட்டதாக கூறி சரண் அடைந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். அப்போது அவர் சொன்ன காரணத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அரியனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்த 43 வயதாகும் சந்திரபோஸ், சென்னையில் சமையல் மாஸ்டராக ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

35 வயதாகும் இவரது மனைவி மஞ்சுளா ஊர்க்காவல் படையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 8வயதில் ஹேமேஷ் என்ற மகன் உள்ளார். இவர் அரியனாம்பேட்டையில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்..
மஞ்சுளா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிறிது மனநிலையும் பாதிக்கப்பட்டிருந்ததாம். இதனால் மஞ்சுளா வேலைக்கு செல்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். லால்குடி அருகே தாளக்குடியில் உள்ள அவரது தாய் அன்னக்கிளி வீட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்
கடந்த வியாழக்கிழமை மஞ்சுளா தனது தாய் வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தனது வீட்டிற்கு (அரியனாம்பேட்டைக்கு) வந்துள்ளார். இதையடுத்து மஞ்சுளாவை தேடிக்கொண்டு அவரது தாய் அன்னக்கிளி அங்கு வந்துள்ளார்.
பின்னர் மஞ்சுளாவை மீண்டும் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வருமாறு அன்னக்கிளி அழைத்திருக்கிறார். அப்போது மஞ்சுளா, தனது தாயுடனும், மாமியார், மாமனாருடனும் தகராறு செய்து சிகிச்சைக்கு வர முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம். இதனால் தாய்க்கும், மகளுக்கும் இடையே அன்று இரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்திற்கு பிறகு சனிக்கிழமை இரவு அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். ஞாயிறு அதிகாலை திடீரென எழுந்த அன்னக்கிளி, வீட்டில் கிடந்த கல்லை எடுத்து மகள் என்றும் பார்க்காமல் மஞ்சுளாவின் தலை மீது போட்டுள்ளார். இதில் தலை சிதைந்து ரத்த வெள்ளத்தில் மஞ்சுளா துடிதுடித்து இறந்தார்.

இதைத்தொடர்ந்து அன்னக்கிளி தொட்டியம் காவல்நிலையத்திற்கு சென்று தனது மகளை கல்லை தூக்கி போட்டு கொன்றுவிட்டதாக கூறி சரண் அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின், தொட்டியம் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
பின்னர் மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிந்து, அன்னக்கிளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே மகளின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அன்னக்கிளியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications