மகளின் சாவுக்கு நீதி கேட்டு தீக்குளிக்க முயன்ற பெண்.. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
Recommended Video
நெல்லை: மகளின் மர்ம சாவுக்கு நீதி விசாரணை நடத்த கோரி அவரின் தாயார் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட காசிதர்மத்தை சேர்ந்த இசக்கி முத்து மற்றும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீக்குளித்து இறந்தார்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் இரு வாயில்களிலும் இன்ஸ்பெக்டர் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தற்போது மனு கொடுக்க வருபவர்களை ஆண், பெண் போலீசார் சோதனை செய்த பிறகு அனுப்பி வருகின்றனர். இதையும் மீறி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது மகள் தேவிகங்காவை கடையநல்லூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்.
8 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் திடீரென இறந்தார். அவரை மருமகன் பாலசுப்பிரமணியன் கொன்று விட்டதாக கூறி மகேஸ்வரி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். ஆனாலும் நடவடிக்கை இல்லாததால் விரக்தி அடைந்த அவர் மாலை கலெக்டர் அலுவலகத்திற்கு கெரசின் கேனுடன் வந்துள்ளார். அப்போது அலுவலக வாசலில் சங்கரன்திரடு பகுதியை சேர்ந்த பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் போலீசார் மகேஸ்வரை சரியாக கவனிக்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் கெரசினை தன் மேல் ஊற்றி கொண்ட அவர் தீ வைக்க முயன்றார்.
இதை தாமதமாக கவனித்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். பாய்த்து சென்று அவரது கையில் இருந்த தீப்பெட்டியை பறித்தனர். உடனடியாக அவரை கலெக்டரிடம் அழைத்து சென்றனர். அவரி்டம் மனு கொடுத்ததில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறி அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.