சுவாதியைக் கொன்றது 'முத்துக்குமார்'... தஞ்சையில் இருக்கிறார்... தமிழச்சி கிளப்பும் பரபரப்பு
சென்னை: இளம் பெண் சுவாதி படுகொலை ஜாதிக்காக நடத்தப்பட்ட ஆணவக் கொலை. அவரைக் கொன்ற உண்மையான நபர் முத்துக்குமார். அவர் தஞ்சாவூரில் பாதுகாப்பாக இருக்கிறார் என்று தமிழச்சி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சுவாதி படுகொலை சாதிக்காக நடத்தப்பட்ட ஆணவக்கொலை! என்ற தலைப்பில் இந்த தமிழச்சி தனது பேஸ்புக் பதிவில் இதுகுறித்துக் குறிப்பிட்டுள்ளார். இவர் வெளிநாடு ஒன்றில் வசித்து வருபவர் ஆவார்.
இந்த பதிவில் அவர் பல பரபரப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். அதிலிருந்து சில..
திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி
சுவாதி படுகொலை செய்யப்பட்ட அன்றைய பரபரப்பான தினத்திலேயே 'சுவாதியை கொன்றது பிலால் என்ற இஸ்லாமிய இளைஞர்' என்று பொது ஊடகங்களில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சிலரால் ஏற்படுத்தப்பட்ட #வதந்தி என்பது போகிற போக்கில் 'உளறுவாயன்கள்' பேசிய பேச்சல்ல. #இஸ்லாமிய_வெறுப்பு_அரசியல் சாதாரணமாக நடந்தவையல்ல. அனைத்தும் திட்டமிட்டே இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டவை.
தடுமாற ஆரம்பித்த விசாரணை
ராம்குமார் கழுத்தை அறுத்தது போலிசுடன் வந்திருந்திருந்த அடியாட்கள் என்பது பொது ஊடகங்களில் மக்கள் நலம் விரும்பிகளால் அம்பலப்படுத்தப்பட்டதும் சுவாதியின் கொலை விசாரணை தடுமாற ஆரம்பித்தது. அவசர அவசரமாக இந்துத்துவ அமைப்பு ராம்குமாரை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் சார்ந்த வக்கிலை அனுப்பி அதுவும் பல விதாதங்களால் முறியடிக்கப்பட்டது.
என்ன சொன்னார் பிலால்?
இந்நிலையில் பிலாலிடம் #காவல்துறை #விசாரணை நடத்தி அவர் என்ன சொன்னார் என்பதை வெளியிட மறுத்தது. தற்போதைக்கு ராம்குமார்தான் குற்றவாளி என்பதை நிருபித்து விசாரணையை முடித்து இந்துத்துவவாதிகளை காப்பாற்ற சில முக்கிய அரசியல்வாதிகளால் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.
கொன்றவர் முத்துக்குமார்
சுவாதியை கொலை செய்தவர் பெயர் #முத்துக்குமார். தற்போது தஞ்சாவூரில் சுவாதியின் சித்தப்பா பாதுகாப்பில் இருக்கிறார். சுவாதி கொலையில் தொடர்புடையவர்கள் 4 பேர்கள். இவர்களை பாதுகாப்பது சந்தான கோபலகிருஷ்ணனும் அவருடைய தம்பியும். அவர்கள் திட்டங்களுக்கு உடந்தையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சிலர்.
வழக்கை சந்திக்கத் தயார்
இத்தனையும் தவறு. தமிழச்சி என்பவர் எங்களை குறித்து அநாகரிகமாகவும், தவறாகவும், கண்ணியமின்மை இன்றி தொடர்ச்சியாக பொய் குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டிருக்கிறார் என்று என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட ரீதியாக சந்தான கோபலகிருஷ்ணனும் அல்லது அவருடைய தம்பியும் #புகார் கொடுப்பார்களானால் எனது வழக்கறிஞர் மூலமாக அனைத்து ஆதாரங்களையும் இந்திய நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன். இதற்கு சந்தான கோபலகிருஷ்ணனும் அல்லது அவருடைய தம்பியும் தயாரா?
ஆதாரத்தைத் தர முன்வருவாரா?
இதுதான் தமிழச்சியின் பதிவு. தன்னிடம் முத்துக்குமார்தான் குற்றவாளி என்பதற்கான ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் தமிழச்சி. அப்படியானால் அதுதொடர்பானதை கோர்ட்டில் சமர்ப்பித்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரைக் காப்பாற்ற அவர் முனைவாரா என்ற கேள்வியை பலர் எழுப்பியுள்ளனர்.