பாலி தீவில் கடலில் மூழ்கி சேலம் புதுமணத் தம்பதி பரிதாப பலி.. ஹனிமூன் சென்ற போது விபரீதம்
சேலம்: இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு தேனிலவுக்கு சென்ற சேலத்தை சேர்ந்த புதுமண தம்பதி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமணமாகி ஒரே வாரத்தில் புதுமணத்தம்பதியினர் விபத்தில் மரணமடைந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹனிமூன் பயணம் சந்தோஷத்தை கொடுப்பதற்கு பதிலாக சிலருக்கு எமனாகி விடுகிறது. போட்டோ சூட் எடுக்கும் போது சிலர் தண்ணீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர். வீட்டில் படுக்கை அறையில் முதலிரவு கொண்டாடிய தம்பதி மாரடைப்பில் மரணமடைந்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த புதுமணத்தம்பதியினர் ஹனிமூன் சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கி மரணமடைந்த தம்பதியின் பெயர் லோகேஷ்வரன், விபூஷ்னியா என்பதாகும். லோகேஷ்வரன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். மருத்துவரான இவர் சென்னை பூந்தமல்லியை சேர்ந்த விபூஷ்னியாவை காதலித்தார். பல ஆண்டு காதல் திருமணத்தில் முடிந்தது. பெற்றோர் சம்மதத்துடன் உற்றார்கள் உறவினர்கள் புடைசூழ கடந்த வாரம் சேலத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்த நிலையில் ஹனிமூன் செல்ல முடிவு செய்தனர். மாலத்தீவு, பாலி தீவு போன்றவைகளை செலக்ட் செய்த நிலையில் இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு ஹனிமூன் சென்றனர். உற்சாகமாக பல இடங்களையும் சுற்றிப்பார்த்தனர். மகிழ்ச்சியாக இருந்த அந்த தம்பதியினருக்கு எமன் படகு வடிவில் காத்திருக்கிறான் என்று தெரியாமல் போனதுதான் சோகம்.
கடற்கரைக்கு சென்ற லோகேஷ்வரன் விபூஷ்னியா தம்பதியினர் விரைவு மோட்டார் படகில் சாகச பயணம் மேற்கொண்டனர். திடீரென விபத்தில் சிக்கியது. படகு கவிழ்ந்தது தண்ணீருக்குள் இருவருமே மூழ்கி உயிரிழந்தனர். பல ஆண்டுகள் காதலித்து ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் முடித்து ஹனிமூன் சென்ற இடத்தில் இருவருமே ஜலசமாதியானது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் உத்தரப் பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் கோதியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் யாதவ். இவரது 22 வயது மகன் பிரதாப் யாதவ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா தேவி என்ற 20 வயது இளம் பெண்ணுக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
மே 31ஆம் தேதி ஊர்வலமாக புதுமண தம்பதி வீட்டிற்கு வந்த நிலையில், அன்றிரவு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. தம்பதி இருவரையும் மகிழ்ச்சியுடன் முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்த உறவினருக்கு, அடுத்த நாள் காலை பேரதிர்ச்சி காத்திருந்தது. விடிந்து நீண்ட நேரம் ஆகியும் ஜோடி இருவரும் வெளியே வரவில்லை.
உறவினர்கள் கதவை தட்டிப் பார்த்து திறக்கவில்லை என்றது கதவை உடைத்து அறைக்குள் சென்றனர். உள்ளே பிரதாப் மற்றும் அவரது மனைவி புஷ்பா இருவரும் பேச்சு மூச்சின்றி சடலமாக இருந்தனர். உறவினர்களுக்கு அதிர்ச்சி ஏற்படவே இருவரையும் தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்களும் பரிசோதித்து மரணத்தை உறுதி செய்தனர். திருமணம் முடிந்து சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் கண்ணீரில் ஆழ்ந்தனர். பாலி தீவுக்கு இன்ப சுற்றுலா சென்ற தம்பதியினர் நேற்றைய தினம் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.