கரூரில் ஒருதலைக் காதலால் கொடூரம்... காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து... 2 பேர் கைது
கரூர்: கரூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரின் மகள் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ப்ளஸ்-2 படித்து வருகிறார்.
அந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த மாயவன் என்பவரின் மகன் சுரேஷ் (30). என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாயவனுக்கும் தெரிந்த நிலையில், இதை மாயவனும் ஆதரித்து வந்தாராம்.
இந்த நிலையில், கடந்த, 8-ஆம் தேதி மாலை அந்த மாணவியை சுரேஷ் சந்தித்துள்ளார். அப்போது, தன்னை காதலிக்கச் சொல்லி அந்த மாணவியை வற்புறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த சுரேஷ் அந்த மாணவியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதைத் தடுக்க வந்த மாணவியின் பாட்டிக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதில் காயம் அடைந்த, இருவரும், கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், சுரேஷ் மற்றும் அவரது தந்தை மாயவன் ஆகியோரை, நேற்றிரவு கைது செய்தனர்.