ஏம்ப்பா தம்ப்ரி... ஜோசியக்காரரன் சொன்னது பலிக்காட்டி பாவம் கிளி என்னப்பா செய்யும்...??
புதுச்சேரி: புதுச்சேரியில் ரோட்டோரமாக கிளியுடன் உட்கார்ந்து ஜோசியம் சொல்பவரிடம் போய் ஒரு வாலிபர் குறி கேட்டுள்ளார். உனக்கும் உனது காதலிக்கும் திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்று ஜோசியக்காரரும் பிரமாதமாக குறி சொல்லியுள்ளார். ஆனால் காதலியோ வேறு ஒருவருடன் போய் விட்டார்.. டென்ஷனான வாலிபர், சம்பந்தப்பட்ட ஜோசியக்காரரிடம் போய் அவர் வைத்திருந்த கிளியை கூண்டோடு தூக்கிக் கொண்டு போய் விட்டார்.
இது இப்போது போலீஸ் வரை போய் வழக்கு வேறு போட்டு பெரும் அக்கப்போராகியுள்ளது புதுச்சேரியில்.
ஆனால் தற்போது அந்தக் கிளியை கடத்திய நபர் அதை மறுபடியும் கொடுத்து விட்டுப் போய் விட்டார்.
புதுச்சேரி சங்கரன்
புதுச்சேரி கடற்கரை அருகே சங்கரன் என்பவர் கிளி ஜோசியம் பார்த்துப் பிழைப்பு நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு இளைஞர்கள் வந்தனர். வந்தவர்கள் திடீரென சங்கரனின் கிளி இருந்த கூண்டை அப்படியே பெட்டியோடு தூக்கிக் கொண்டு பறந்து விட்டனர்.
'மாயி மின்னல்...'
பதறிப் போன சங்கரன் அவர்களைத் துரத்தினார். ஆனால் அவர்களோ மாயி படத்தில் வரும் மின்னல் போல சிட்டாகப் பறந்து விட்டனர். அவர்களை ஆட்டோவில் போய் துரத்தியும் கூட பிடிக்க முடியவில்லை சங்கரன்.. அப்படி ஒரு ஓட்டம் ஓடி விட்டனர் இருவரும்.
கிளியைக் கொடுத்துருப்பா...
பெரும் அதிர்ச்சிக்குள்ளான சங்கரன் போலீஸில் புகார் கொடுத்தார். தனது புகாரில், கிளிப்பெட்டியில் 3,000 ரூபாய் ரொக்கப்பணமும், நகை அடகு வைத்த ரசீதும், இவ்வளவு நாள் நான் பிழைப்பு நடத்தி வந்த கிளியும் தான் இருந்தது. பணத்தை வேண்டுமானால் எடுத்து கொண்டு என் கிளியை திருப்பி தந்தாலே போதும். கிளி இல்லாமல் நான் பிழைப்பே நடத்த முடியாது என்று கூறியிருந்தார்.
இந்தாப்பா உன் கிளி .. நீயே வச்சுக்க
தனது பிழைப்பு போனதால் வருவோர் போவோரிடமும் புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில் கிளிப் பெட்டியைத் திருடிச் சென்றவர்கள் அதை லாஸ்பேட்டை பகுதியில் போட்டு விட்டுசத் சென்றனர். அந்தப் பெட்டியை எடுத்த அப்பகுதியினர் பெட்டிக்குள் வைத்திருந்த சங்கரனின் தொலைபேசி எண் அடங்கிய சீட்டைப் பார்த்து தகவல் சொல்லி சங்கரன் வயிற்றில் பால் வார்த்தனர்.
காதல் கிளி பறந்து போயிருச்சேய்யா...
ஓடி வந்து தனது கிளியைப் பார்த்து மகிழ்ந்த சங்கரன், பெட்டிக்குள் இருந்த கடிதத்தைப் பார்த்து அதை எடுத்துப் படித்தார். அதில், கிளிப் பெட்டியை எடுத்தது நான்தான். ஒருமுறை கடற்கரைக்கு வந்தபோது உங்களிடம் கிளி ஜோசியம் பார்த்தேன். நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன். என்னுடைய காதல் வெற்றி பெறுமா? நாங்கள் திருமணம் செய்துக் கொள்வோமா? என்று கேட்டேன். அதற்கு நீங்கள், கண்டிப்பாக உங்களுக்கு அந்த பெண் கிடைப்பாள். நீங்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்வீர்கள் என்று சொன்னீர்கள்.
கோவத்துல தூக்கிட்டுப் போயிட்டேன்
ஆனால், நீங்கள் சொன்னது எதுவும் நடக்கவில்லை. அந்த பெண் வேறொருவனை திருமணம் செய்துக் கொண்டாள். அதனால் உங்கள் மீது கோபம் ஏற்பட்டது. அந்த கோபத்தில்தான் நானும் என்னுடைய நண்பனும் அன்று உங்கள் கிளிப் பெட்டியை எடுத்து சென்றோம். அதன்பிறகு, நீங்கள் எல்லோரிடமும் புலம்பி வருவதை கேட்டு மனம் திருந்தி இதை வைத்துள்ளோம். எங்களை மன்னிக்கவும் என்று எழுதியிருந்தது.
தன்னிடம் ஜோசியம் கேட்க வந்தவரின் காதல் கிளிதான் பறந்தது.. அந்த ஜோசியத்தைச் சொன்ன தன் கிளி வந்து விட்டதே .. அது போதும் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார் சங்கரன்.