விளைநிலங்கள் செத்துருச்சு, விவசாயிகளை கண்டு கொள்ளாத அரசு.. மெரீனாவில் முழங்கிய போலீஸ்காரர் ஆவேசம்
சென்னை மெரினாவில் போராடும் இளைஞர்களுக்கு தமிழக அரசின் காவலர் ஒருவர் இன்று திடீரென சீருடையில் வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது தமிழக அரசு விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
சென்னை: மெரினாவில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்ற காவலர் ஒருவர் விவசாயிகளை அரசு கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டினார். சீருடையில் காவலர் ஒருவர் அரசுக்கு எதிராக குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டம் நான்காவது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மெரினாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் திடீரென போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். காவலர் சீருடையிலேயே போராட்டத்தில் குதித்த அவர் மத்திய மாநில அரசுகள் மீது குற்றம் சாட்டினார்.
செத்துப்போன விளைநிலங்கள்
செயற்கை உரங்களை கொடுத்த விளை நிலங்களை சாகடித்து விட்டதாக அவர் குற்றம்சாட்டினார். இதனால் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக போராடனும்
விவசாயிகளின் தற்கொலையை தடுக்க அரசு என்ன செய்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மாணவர்கள் ஜல்லிக்கட்டோடு தங்களின் போராட்டத்தை நிறுத்தாமல் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட வேண்டும் என்றும் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்றும் அந்த காவலர் கோரிக்கை விடுத்தார்.
அரசுக்கு எதிராக காவலர்
காவலர் ஒருவர் அரசுக்கு எதிரான போராட்டத்தில் காவலர் சீருடையில் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காவலரின் துணிச்சலை பாராட்டிய போராட்டக்குழுவினர் அவரைக் கட்டித்தழுவி முத்தமிட்டனர்.
பஞ்சம் பிழைக்க வந்தவர்
ராமநாதபுரத்தை பூர்விகமாக கொண்ட அந்தக் காவலர் பஞ்சம் பிழைப்பதற்காக மதுரை வந்ததாக கூறினர். காவலர் சீரடையில் அரசுக்கு எதிராக பேசியதால் பதறிய சக காவலர்கள் அவரை அழைத்துச் சென்றனர்.