ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மறக்க முடியாத பிறந்த நாள்... கிருஷ்ணாவுக்கும்தான்!
சென்னை: தனது 48வது பிறந்தநாளை மிகவும் அருமையான முறையில் கொண்டாடியுள்ளார் இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான். நேற்று தனது ஸ்டூடியோவில் கேன்சர் பாதிப்புக்கு ஆளான சிறுவனை சந்தித்து போன் ஒன்றை பரிசாக அளித்து அந்த சிறுவனை மகிழ்வித்துள்ளார் அவர்.
சமீபகாலமாக திரைத் துறையினர் கடும் நோய்ப் பாதிப்புக்குள்ளான தங்களது ரசிகர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நேற்று கேன்சர் பாதிப்புக்கு ஆளாகி, உயிருக்குப் போராடி வரும் தனது ரசிகர் ஒருவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கிருஷ்ணா. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணாவை டாக்டர்கள் கை விட்டு விட்ட நிலையில் வீட்டில் நோயோடு போராடி வருகிறார். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகரான இச்சிறுவன், அவரை நேரில் சந்திக்க வேண்டும் என விரும்பியுள்ளார்.
கிருஷ்ணாவின் இந்த ஆசை மேக் எ விஷ் இந்தியா அமைப்பு மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஏ.ஆர்.ரஹ்மான், கிருஷ்ணாவைச் சந்திக்க விரும்பினார்.
நேற்று மாலை 4 மணியளவில் கிருஷ்ணா, ஏ.ஆர்.ரஹ்மானை அவரது ஸ்டூடியோவில் சந்தித்தார். அப்போது, கிருஷ்ணாவுக்கு சாம்சங் கேலக்ஸி போன் ஒன்றை பரிசாக அளித்த ஏ.ஆர்.ரஹ்மான், அதில் தனது பாடல்களையும் பதிவேற்றம் செய்து கொடுத்தார்.
பின்னர், கிருஷ்ணாவை தனது கீபோர்டை வாசிக்கச் சொல்லி சிறிது நேரம் ரசித்தார். கிருஷ்ணாவுடன் அமர்ந்து சிறிது நேரம் உரையாடினார். சுமார் 45 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்தது. இந்தச் சந்திப்பால் கிருஷ்ணா மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
கிரேட்!