அவிநாசியில் 5 நிமிடம் ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ இருந்த ஆ.ராசா....
கோவை: பிரச்சாரத்தின் போது தனது வாகனம் முற்றுகையிடப் பட்டதைத் தொடர்ந்து ஐந்து நிமிடம் உண்ணாவிரதம் இருந்த திமுக வேட்பாளர் ஆ.ராசாவால் அவிநாசியில் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா போட்டியிடுகிறார். அதன்படி, நேற்று அவிநாசி பகுதியில் வாக்குச் சேகரித்தார் அவர்.
அப்போது தெக்கலூர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது, பொதுமக்களும் போராட்டக் குழுவினரும் ராசாவின் வாகனத்தை முற்றுகையிட்டனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட ராசா, ‘மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக, போராடுவோம், போராடுவோம்' என அவரும் கோஷமிடத் தொடங்கினார்.
இதை சற்றும் எதிர்பார்த்திராத பொதுமக்கள் மற்றும் போராட்டக் குழுவினர், ‘எச்சரிக்கை...எச் ரிக்கை....' என்றபடி ராசாவின் வாகனத்தை முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
பதில் சொல்லுங்கள் ராசா...
அதனைத் தொடர்ந்து அங்கிருந்த போராட்டக் குழு மற்றும் பொதுமக்களிடம் ராசா பேசியபோதும், அங்கிருந்தவர்கள் சமாதானமடையவில்லை. இதை யடுத்து அங்கிருந்தவர்கள், நீங்கள் 5 வருடம் இருந்தீர்கள், அவிநாசி அத்திக்கடவு திட்டத்துக்காக என்ன செய்தீர்கள் எனக் கேள்வி எழுப்பினர்.
ஜெயில்ல தானப்பா இருந்தேன்...
அதற்கு, ‘உலக வங்கி உதவியுடன் இந்த திட்டத்தை நிறைவேற்றித் தருவேன். இந்தமுறை எம்.பி ஆனதும் இந்த திட்டத்தை நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்ததோடு, கடந்தமுறை நான் ஜெயிலில்தான் இருந்தேன்' என பதிலளித்துள்ளார் ராசா.
சாகும் வரை உண்ணாவிரதம்...
மறுபடியும், நீங்கள் ஜெயிலுக் குப் போய்விட்டால் நாங்கள் என்ன செய்வது என தடாலடியாக பொதுமக்கள் திருப்பிக் கேட்கவும்...ஒருகணம் திகைப்படைந்து நானும் உங்களுடன் போராடத் தயார் என்றபடி சாலையில் உட்கார்ந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் தயார் என அறிவித்தார் ராசா.
சாலையில் அமர்ந்த ராசா...
அதனைத் தொடர்ந்து, தெக்கலூர் - வெள்ளாண்டிபாளையம் சாலையில் ராசாவின் வாகனத்துக்கு முன், போராட்டக் குழு அமர்ந்திருந்த சாலைப் பகுதிக்கு சென்று தானும் சாகும் வரை உண்ணா விரதம் என்று சொல்லி அமர்ந்தார் ராசா.
5 நிமிடத்தோடு முடித்துக் கொண்டார்...
பின்னர் 5 நிமிடத்தில் சம்பவ இடத்தில் இருந்து வாகனத்தில் நழுவிச் சென்றார் ராசா. இதனால் அக்கு என்ன நடக்கிறது என போராட்டக் குழுவினரும், பொதுமக்களும் திகைத்துப் போய் நின்றனர்.
பரபரப்பு...
வெறும் 5 நிமிடம் மட்டுமே ‘சாகும் வரை உண்ணாவிரதம்' இருந்த ஆ.ராசாவால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் பரபரப்பு நிலவியது.
மீண்டும் முற்றுகை...
அதனைத் தொடர்ந்து நேற்று மாலை முதலிபாளையம் கிராமத்திலும் அவிநாசி அத்திக்கடவு போராட்டக் குழு மற்றும் பொது மக்கள் ராசாவின் வாகனத்தை முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.