ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு, குருப்பெயர்ச்சி வழிபாடு: பவானி கூடுதுறையில் விழாக்கோலம்
ஈரோடு: பவானி கூடுதுறையில் ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு, குருப் பெயர்ச்சி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெறுவதால் நீராட வரும் பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முப்பெரும் விழாக்கள் ஒரே நாளில் வருவதால் பவானி கூடுதுறை விழாக்கோலம் பூண்டுள்ளது.
புகழ்பெற்ற பரிகாரத் தலமான பவானி கூடுதுறையில் ஆடி மாதத்தில் ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை வழிபாடுகள் பிரசித்தி பெற்றவை. இந்நாளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூத்தோர் வழிபாடு நடத்துவதோடு, பல்வேறு பரிகார வழிபாடுகளிலும் ஈடுபடுவர். இதனால், கூடுதுறை பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் குருப்பெயர்ச்சி ஆகிய மூன்று முக்கிய தினங்களும் ஒரே நாளில் வருவதால் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆடிப்பெருக்கு விழாவுக்கு மேட்டூர் அணையிலிருந்து தற்போது கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்குச் செல்லக்கூடாது எனவும், ஆண்கள், பெண்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் கரையோரத்தில் பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூத்தோர் வழிபாடு மற்றும் பரிகாரத்துக்கு மண்டபம் தாற்காலிக கூரைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் மூழ்கும் பக்தர்களை உடனடியாக மீட்கும் வகையில் உயிர்காக்கும் உபகரணங்களுடன் தீயணைப்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தவும் கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தனித்தனியே பாதுகாப்பாக நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பவானி காவல்துணை கண்காணிப்பாளர் ஜானகிராம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.