திருத்தணியில் ஆடிக்கிருத்திகை கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
திருத்தணி: ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அங்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகப் பெருமானுக்கு உகந்த திருவிழாக்களில் ஆடிக்கிருத்திகை விழாவும் ஒன்று. இன்று ஆடிக்கிருத்திகைநாளாகும்.
ஆறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில், ஆடிக்கிருத்திகைத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிக் கிருத்திகை திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. மூலவர் முருகனுக்கு தங்க கவசம் அணிவித்தனர். பின்னர் மூல வருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

அசுவினி காவடி
சனிக்கிழமையன்று அசுவினி காவடி நிகழ்ச்சி நடந்தது. மஞ்சள், செவ்வாடை அணிந்த பக்தர்கள், பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். மொட்டை அடித்து முருகனை வழிபட்டனர்.

ஆடி பரணி அலங்காரம்
ஞாயிறன்று ஆடி பரணி விழாவை முன்னிட்டு முருகன், சிறப்பு அலங்காரத்தில் காட்சிக் கொடுத்தார். அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம், வைர கீரிடம் பச்சைகல் மரகத மாலை, அணிவிக்கப்பட்டிருந்தது.

காவடி சுமந்த பக்தர்கள்
தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் காவடி சுமந்து வந்து முருகனை வழிபட்டனர். பெண்கள், குழந்தைகளும் காவடி சுமந்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி என சுமார் 5 லட்சம் பக்தர்கள் காவடி செலுத்தினர். காவடி செலுத்த தனி மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தெப்பத்தில் முருகன்
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சனிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெற்று வருகிறது. சரவண பொய்கை திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி, தெய்வானை சமேதராய் உற்சவ கடவுள் எழுத்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது சிறப்பம்சம்.

வேலூர் முருகன் கோவில்
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வேலூர் அருகே பிரசித்தி பெற்ற ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் நேற்று முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இங்கு ஆடி பரணியை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு புஷ்பபல்லக்கில் முருகன் மலைவலம் வந்தார். அதனை தொடர்ந்து கீழ்மின்னல் கிராமத்தில் வீதிஉலா நடைபெற்றது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை முதல் விடிய விடிய காவடிகளை எடுத்துச்சென்ற வண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications