அட... முதல்வர் ஓ.பி.எஸ். வீட்டுக்குள் நுழைந்து ஆம் ஆத்மியினர் போராட்டம்!
சென்னை: நெல்லை வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டுக்குள் நுழைந்து ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையைச் சேர்ந்த வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்புதான் காரணம் எனக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர்களை கைது செய்தனர்.
இருப்பினும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் கைது செய்ய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை. இந்த தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியினர் 20 பேர் திடீரென முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டுக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் காவலை மீறி உள்ளே நுழைந்த ஆம் ஆத்மி கட்சியினர் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.
ஆம் ஆத்மியினர் உள்ளே நுழைந்த போது வீட்டுக்குள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications