டெல்லி மக்களின் நம்பிக்கையை வீணாக்கிவிட்டது ஆம் ஆத்மி கட்சி: நாராயணசாமி
சென்னை: டெல்லி ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் அளித்த ஆதரவை, அவர்கள் வீணாக்கி விட்டனர் டெல்லியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தும், அவர்கள் தயங்குகின்றனர். என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஞாயிறன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பம் காரணமாக அதன்மீது விவாதம் நடத்தி நிறைவேற்ற முடியவில்லை.

வரும் நாட்களில் எதிர்க்கட்சிகள் அமைதியாக இந்த மசோதாவை ஏகமனதாக நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறோம்.
இந்த மசோதாவில் ஒரு திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. உயர் பதவியில் உள்ளவர்கள் மீது ஒருவர் புகார் தந்தால் அதை உடனே ஏற்றுக்கொள்ளக்கூடாது. அந்த புகார்தாரரிடம் உரிய ஆதாரம் இருக்கிறதா? என்பதை விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதை அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்வார்கள்.
சிபாரிசு கடிதம் தர எம்.பி.க்கள் லஞ்சம் பெற்றதாக வந்த செய்தியை பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். இதுபற்றி முறையான புகார் எதுவும் வரவில்லை. ஆனாலும் இது பற்றி உரிய விசாரணை நடத்தி உண்மை இருக்குமானால் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தும், அவர்கள் ஆட்சி அமைக்க முன்வராமல் பின்வாங்கி தயங்குகின்றனர். டெல்லி மக்கள் அளித்த ஆதரவை, அவர்கள் வீணாக்கி விட்டனர். மக்கள் அவர்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு எதிராக நடந்து கொள்கின்றனர் என்றார் நாராயணசாமி.











Click it and Unblock the Notifications