நாடு போற்றிய தலைவராக இருந்தபோதும் நாற்காலிக்கு ஆசைப்படாத கலாம்
சென்னை: நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோதும் சரி, அதற்கு பின்னரும் சரி தான் பங்கேற்ற விழாக்களில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாதவர் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம்.
இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக பதவி வகித்த அப்துல் கலாம் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது.
அரசியல் கட்சிகளைத் தாண்டி இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்ற அந்தஸ்தோடு குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்தவர் கலாம். மீண்டும் குடியரசுத் தலைவர் ஆகும் வாய்ப்பு கிடைத்த போதும், ஆசிரியர் பணியே தனக்கு முக்கியம் என அதனை மறுத்து விட்டார்.

மீண்டும் ஜனாதிபதி வாய்ப்பு...
பதவிகளுக்காக, நாற்காலிகளுக்காக பலர் அல்லும் பகலும் அலைந்து கொண்டிருக்க, நாட்டின் முதல் குடிமகன் ஆகும் வாய்ப்பு இரண்டாம் முறை கிடைத்தும் அதனை மறுத்தவர் கலாம்.

தனி நாற்காலிகள் வேண்டாம்...
இது மட்டுமின்றி தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தனக்கென தனி சிறப்பு நாற்காலிகள் போட அவர் அனுமதிப்பதில்லை. மற்றவர்களும் தானும் சமம் என கருதி எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததாலேயே மக்கள் ஜனாதிபதியாக உலகத்தில் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்தியர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்தார்.

வெல்வெட் நாற்காலி...
சில ஆண்டுகளுக்கு முன், வடசென்னை சுங்கச்சாவடி அருகே தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்தார் கலாம். அப்போது மேடையில் அவருக்கு மட்டும், 'வெல்வெட்' போர்த்திய நாற்காலி போடப் பட்டிருந்தது. மற்றவர்களுக்கு மர நாற்காலி போடப்பட்டிருந்தது. இதை கவனித்த கலாம், 'எனக்கும் மர நாற்காலியே போடுங்கள்' எனக்கூறி, 'வெல்வெட்' நாற்காலியில் அமர மறுத்தார்.

பாதுகாவலருக்கும் நாற்காலி...
இதேபோல், ஜனாதிபதியாக இருந்த போது, குரோம்பேட்டையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றார் கலாம். அப்போது தன் பாதுகாவலருக்கு நாற்காலி போடப்படாததை கவனித்து, அவருக்கும் நாற்காலி போட வலியுறுத்தினார். பாதுகாவலருக்கு நாற்காலி போடப்பட்ட பின்னரே கலாம் தனது நாற்காலியில் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications