ராமேஸ்வரத்தில் வேகமாக வளரும் அப்துல் கலாம் மணி மண்டபம்... ஜூலை 27-ல் மோடி திறக்கிறார்
ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மணி மண்டபம் கட்டும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஜூலை 27ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு மணி மண்டபம் கட்டும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வரும் ஜூலை 27-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மணி மண்டபத்தை திறந்து வைக்கிறார்.
ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், தனது பதவிக் காலத்துக்கு பின்னர் கல்லூரி, பள்ளி கருத்தரங்குகளில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார். மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவிற்குச் சென்றபோது அவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி உயிரிழந்தார்.
அவரது உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் உள்ள பேய்கரும்பு என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு மத்திய அரசு சார்பில் ரூ.50 கோடி செலவில் மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணியை, கடந்த ஆண்டு மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், வெங்கய்ய நாயுடு ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
பெரும் தாமதத்திற்குப் பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ரூ.15 கோடியில் மணி மண்டபம் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தற்போது கிரானைட், கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் ஹைதராபாத், டெல்லி, ஜெய்ப்பூர், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு பணிகள் மிகவும் வேகமாகவே நடந்து வருகின்றன.
வரும் ஜூலை 27-ஆம் தேதி கலாமின் இரண்டாவது நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளதால் அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.