தமிழகத்தின் அவல நிலைக்கு அரசின் மதுக்கடைகள்தான் காரணம் - மதிமுக
விருதுநகர்: தமிழ்நாட்டின் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு நாள்தோறும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் நடப்பதற்கும், சாலை விபத்துக்களில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடம் வகிக்கும் அவல நிலை ஏற்பட்டதற்கும், தமிழ்நாடு எல்லா வகையிலும் சீரழிந்து வருவதற்கும் முழு முதற்காரணம் தமிழக அரசு நடத்திவரும் மதுக்கடைகள்தான் என்று மதிமுக கூறியுள்ளது.
இதுதொடர்பாக விருதுநகர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்...
தமிழ்நாடு போற்றிப் பின்பற்றிய விழுமிய பண்பாட்டு அடையாளங்கள் தொலைந்து வருவதும், மேற்கத்திய கலாச்சாரச் சூட்டில் விழுந்து மடியும் விட்டில் பூச்சிகளாய் இளைய சமுதாயம் தம்மை இழந்து வருவதும், தமிழ்நாட்டின் எதிர்கால நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரையும் கவலை அடையச் செய்து உள்ளது.

மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு 23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி,அதில் ஒரு பகுதியை இலவச திட்டங்களுக்கு தமிழக அரசு செலவிடுவது என்பது, கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதற்கு ஒப்பாகும்.
இலட்சக்கணக்கான உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் சொற்ப வருமானத்தையும் ‘டாஸ்மாக்' கடைகளின் மூலம் சுரண்டிவிட்டு, அவர்களைச் சார்ந்த குடும்பங்களை தெருவில் நிறுத்திவிட்டு, நலத்திட்டங்களை அளிக்கிறோம் என்று விளக்கம் அளிப்பதை எந்த ஒரு மக்கள் நல அரசும் செய்யாது.
ஆனால், தமிழ்நாட்டின் ஆளும் பொறுப்பில் இருக்கும் அரசுகள், கூச்சம் இன்றி இந்த அநீதியை மக்களுக்கு இழைத்து வருகின்றன.
மதுவின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க சிலுவைப்போரை பிரகடனம் செய்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ‘முழு மதுவிலக்கே! எங்கள் இலக்கு!' என்பதை வலியுறுத்தி, 2012 டிசம்பர் 12 இல் நெல்லை உவரியில் தொடங்கி, 2013 ஏப்ரல் 29 இல் ஈரோடு வரை மூன்று கட்டமாக 38 நாட்கள் 1100 கி.மீ தூரம் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
அதன் விளைவாக, இன்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பல ஊர்களில் பெண்களும், இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கி உள்ளனர்.
தமிழக மக்களின் உள்ளம் எரிமலையாக கனன்று கொண்டு இருப்பதை உணர்ந்து கொண்டு, தமிழக அரசு உடனடியாக மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும், முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்த மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications