சுவாதிக்கு ஏற்கனவே தெரிந்தவர்தான் கொலையைச் செய்திருக்க முடியும்... ரயில்வே எஸ்.பி ஆனி விஜயா
சென்னை: சுவாதிக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் இந்த கொலையை செய்திருக்க முடியாது என்று திருச்சி ரயில்வே எஸ்.பி ஆனி விஜயா தெரிவித்துள்ளதால் அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கை 3 தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சுவாதி கொலை ரயில் நிலையத்தில் நடந்ததால் முதலில் ரயில்வே போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். திருச்சி ரயில்வே எஸ்.பி. ஆனி விஜயா சென்னைக்கு வந்து கடந்த 3 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினார். சுவாதியின் உறவினர்கள், நண்பர்களிடம் தொடர் விசாரணை நடத்ரிய ஆனி விஜயா, நேற்று காலை சுவாதியின் வீட்டுக்கு ஆனி விஜயா சென்றார். அங்கு அவரது தந்தையிடமும் விசாரணை நடத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆனி விஜயா,
பொதுமக்கள் முன்னிலையில் சுவாதி அரிவாளால் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவமாக அமைந்து இருக்கிறது. சுவாதி கொலையில் புதிய வீடியோ படங்கள் போலீசிடம் சிக்கி உள்ளன. அதில் கொலையாளியின் உருவம் ஓரளவு தெளிவாக தெரிகிறது. அதை வைத்து கொலையாளியை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர் என்றார்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சுவாதியின் தனிப்பட்ட தன்மைகள், அவரது செயல்பாடுகள் மற்றும் குணாதிசியங்கள் எப்படி இருக்கும்? அவளுக்கு பிடித்த விஷயங்கள் என்னென்ன? என்பது தொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
வீட்டில் சுவாதி எப்படி நடந்து கொள்வார்? எப்படி இருப்பார்? என்பது தொடர்பாக அவரது தந்தை மற்றும் உறவினர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவதாகவும் ஆனி விஜயா கூறினார்.
சுவாதிக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் இந்த கொலையை செய்திருக்க முடியாது. அது மட்டுமே தற்போதைய நிலையில் சொல்ல முடியும். எனவே எல்லா வழிகளிலும் இந்த விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் அறிவியல் பூர்வமாக புலனாய்வு செய்து வருகிறோம். நிச்சயம் கொலையாளியை விரைவில் நெருங்கி விடுவோம் என்று ஆனி விஜயா தெரிவித்தார்.
ஆனி விஜயா விசாரணை செய்து விட்டு சென்ற சில மணி நேரங்களிலேயே சுவாதி கொலை வழக்கு விசாரணை சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது.