அஜித், அர்ஜுன் பட இயக்குநர் சிவக்குமார் மர்ம மரணம்.. அழுகிய நிலையில் உடல் மீட்பு
நடிகர் அஜீத் நடித்த ரெட்டை ஜடை வயசு பட இயக்குனர் சிவக்குமார் சென்னையில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகர் அஜீத் நடித்த ரெட்டை ஜடை வயசு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சிவக்குமார் விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் உடல் அழுகிய நிலையில் இறந்துகிடந்தார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1997 ஆம் ஆண்டு நடிகர் அஜீத், மந்த்ரா, கவுண்டமணி, செந்தில், பொன்வண்ணன் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் ரெட்டை ஜடை வயசு. இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் சி.சிவக்குமார். அதே போல, நடிகர் அர்ஜூன் நடித்த ஆயூத பூஜை என்ற வெற்றித் திரைப்படத்தை இயக்கிவர்.
சினிமா இயக்குனர் சிவக்குமார்(49) சென்னை விகம்பாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா விரிவு நகரில் அவருடைய வீட்டில் வசித்து வந்தார். இவர் இயக்குனர் ஆவதற்கு முன்பு கே.பாக்யராஜ்ஜிடம் உதவி இயக்குனராக இருந்துள்ளார். பின்னர்தான், ரெட்டை ஜடை வயசு திரைப்படம் மூலம் இயக்குனரானார். இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக இருந்துவந்தார். திரைப்பட வாய்ப்புகள் ஏதுமில்லாததால் தனிமையில் வசித்துவந்தார்.
இந்நிலையில், இயக்குனர் சிவக்குமார் விருகம்பாக்கத்தில் அவருடைய வீட்டில் துர்நாற்றம் வருகிறது என்று அருகில் வசிப்பவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் விருகம்பாக்கம் போலீஸார் அங்கெ சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். வீட்டில் நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் இயக்குனர் சிவக்குமார் இறந்துகிடந்துள்ளார். அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனால், துர்நாற்றம் வீசியுள்ளது. உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இறந்த இயக்குனர் சிவக்குமாரின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இயக்குனர் சிவக்குமார் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து வரும் விருகம்பாக்கம் போலீஸார் நம்மிடம் கூறுகையில், இயக்குனர் சிவக்குமார் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு இறந்திருக்க வேண்டும். ஏனென்றால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளிவந்தால்தான் சொல்ல முடியும் என்று தெரிவித்தனர்.