ஏன் இந்தி படிக்கனும்? வாயைவிட்ட மதன் கவுரி - குறிவைத்த பாஜக.. கூட சேர்ந்து கலாய்த்த நடிகர் பிரேம்ஜி
சென்னை: தென் இந்தியாவில் வாழ்ந்துகொண்டு எதற்கு இந்தி கற்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்ட யூடியூபர் மதன் கவுரியை ட்விட்டரில் பாஜகவினர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அவர்களுடன் நடிகர் பிரேம்ஜியும் சேர்ந்துகொண்டு ட்விட்டரில் நக்கலாக கமெண்ட் செய்து இருக்கிறார்.
தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் முயற்சிகள் பல்வேறு வகைகளில் தொடர்ந்து வருகின்றன. மத்திய அரசும் புதிய கல்விக் கொள்கையின் மூலம் மும்மொழிக் கொள்கையை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் மத்திய அமைச்சர் அமித்ஷா போன்றோர்கள் இந்தியை கற்க வேண்டும் என்று பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு பல்வேறு வகையில் பதிலடி வழங்கி இருக்கிறது. கடந்த சில ஆண்டுக்கு முன்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் மெட்ரோ சிரிஸ், நடிகர் ஷாந்தனு, தொகுப்பாளர் கீர்த்தி போன்றோ இந்தி தெரியாது போடா என்று எழுதப்பட்ட டீ சர்ட்டை அணிந்தது பெரும் விவாதப் பொருளானது.
அதேபோல் இந்தி தொடர்பாக அமித்ஷா தெரிவித்த கருத்தை விமர்சிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானும் கடந்த ஆண்டு பேசி இருந்தார். தமிழ்நாட்டில் அவ்வப்போது இந்தி திணிப்பு பிரச்சனைகள் கிளம்புவதும் அதற்கு மக்களும், அரசியல்வாதிகள், தமிழ் ஆர்வலர்களும் எதிர்வினையாற்றிய பிறகு அது ஓய்வதும் வாடிக்கை.
இந்த நிலையில்தான் பிரபல யூடியூபரான மதன் கவுரி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், "நீங்கள் கர்நாடகாவில் இருந்தால் கன்னட மொழியை கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தீர்கள் என்றால் தமிழை கற்றுக்கொள்ளுங்கள். தமிழ் மாநிலங்களில் வாந்து வரும் நாங்கள் ஏன் இந்தியை கற்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
மதன் கவுரியின் இந்த பதிவுக்கு பாஜக மற்றும் ஆதரவாளர்கள் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு பதிலளித்து உள்ள கரூர் நகர பாஜக தலைவர் கார்த்திகேயன், "ஐயையோ மதன் நீங்க ரொம்ப அறிவாளின்னு நினைச்சேன் இப்படி ஒரு கேள்வி கேட்டு இருக்கீங்க நமக்கு ஏகப்பட்ட ஸ்டேட் இருக்கு ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஒவ்வொரு மொழி எல்லாம் கத்துக்க முடியாது என்பதால் தான் எல்லாத்துக்கும் லிங்க் மொழியா ஹிந்திய பயன்படுத்தலாம்னு அம்பேத்கர் ஐயா சொன்னார்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில்தான் நகைச்சுவை நடிகரும், இசையமைப்பாளரும், கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜியும் மதன் கவுரியை கலாய்க்கும் வகையில் ஒரு கருத்தை பதிவிட்டு இருக்கிறார். மதன் கவுரி வெளியிட்ட பதிவு ஆங்கிலத்தை இருந்ததை சுட்டிக்காட்டிய பிரேம்ஜி, "பிறகு ஏன் இதை ஆங்கிலத்தில் டுவீட் செய்து உள்ளீர்கள் சகோ?" என்று கேட்டு உள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.