சரத்குமாரை விடாது துரத்தும் வருமான வரித்துறையினர்.. இன்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
சரத்குமாரிடம் மீண்டும் விசாரணை நடத்த உள்ளதால் அவர் இன்று மீண்டும் வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் முன்பு ஆஜராக உள்ளார்.
சென்னை: நடிகர் சரத்குமாரிடம் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உத்தரவிட்டுள்ளதால் அவர் வருமான வரிதுறை அலுவலகத்தில் ஆஜராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைதேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெறுவது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோரின் வீடுகளில் கடந்த 7-ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது முக்கிய ஆவணங்களும், ரூ.89 கோடி பணமும் கைப்பற்றப்பட்டதால் அவர்களை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி கடந்த திங்கள்கிழமை சரத்குமார், விஜயபாஸ்கர், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோகர் ஆஜராகினர்.
அவர்களிடம் 5 மணி நேரத்துக்கு அதிகமாக விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று சரத்குமாரின் மனைவி ராதிகாவின் ராடன் அலுவலகத்திலும்
8 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வங்கிக் கணக்குகள் குறித்தும் கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அவரை மீண்டும் ராடன் அலுவலகத்துக்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அவரை மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.