ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த பாஜக அரசு முயற்சிக்க வேண்டும்... சரத்குமார்
சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த பாஜக அரசு முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றோடு இணைந்த ஒரு வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. பல கோடி தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தமிழக அரசும், மத்தியில் ஆளும் பாஜக அரசும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டடை மீண்டும் நடத்திட முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், சிலர் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் தடுத்து வருகின்றனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 28 நாள்களே உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக சட்டத்திருத்தத்தை ஏற்படுத்தி அறிவித்தால் தான் கிராமங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவதற்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க முடியும்.
இந்தியாவில் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை காப்பது பா.ஜனதா கட்சியின் கொள்கை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பலமுறை கூறி இருக்கிறார். எனவே தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்த ஆண்டு தைத்திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பா.ஜ.க அரசு முழு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தவும், மகாராஷ்டிரா மாநிலத்தில் காளை மாட்டு பந்தயம் (ரேக்ளா) நடத்தவும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை 2011-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட விலங்குகளில் காளையை சேர்த்து வெளியிட்ட ஆணையை உறுதி செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த விவகாரம் குறித்து சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது,
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை கருத்தில் கொண்டு சட்ட நிபுணர்களிடம் தேவையான ஆலோசனைகளை நடத்தி, தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்குவது குறித்த வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து மசோதாவை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications