அதிமுகவை அலறவைத்த நடிகர் விஜய்யின் 90 சீட், துணை முதல்வர் பேரம்- ஆடிட்டர் குருமூர்த்தி ஓபன் டாக்
சென்னை: அண்ணா திமுகவிடம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு 90 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி கேட்டார் நடிகர் விஜய் என்று பாஜக ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவின் முதல் சாய்ஸ் விஜய்தான்.. அவருடனான கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றி பெறாத நிலையில்தான் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துவிட்டது என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தந்தி டிவி சேனலுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அதிமுகவுக்குள்ளேயே பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற கட்டாயம் உருவாக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். கடந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதிக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என பேசவே இல்லை.

கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி, இந்த தேதிக்குள் சொல்ல வேண்டும் என பாஜக கூறியிருக்கலாம் அல்லது நாங்க வேற வழியாக பார்க்கலாம் என சொல்லி இருக்கலாம். தற்போது பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்துவிட்டதால் டிடிவி தினகரன், ஓபிஎஸ் என்ன ஆவார்கள் என்கிற கேள்வியும் அதிமுகவுக்குள்ளேயே இருக்கிறது.
நடிகர் விஜய், ஒரு கூட்டத்தை வைத்துள்ளார்; அது முதலில் ஒரு கட்சியாக வேண்டும். விஜய் அண்ணா, பெரியார், கார்ல் மார்க்ஸ் பற்றி சொல்கிறார். பாமகவில் இருக்கும் தலைவர்களையும் விஜய் சொல்கிற தலைவர்களையும் பார்த்தால் இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கும்.
அதிமுகவைப் பொறுத்தவரை நடிகர் விஜய் கட்சிதான் முதல் சாய்ஸ். ஆனால் அது நடக்கவில்லை என்பதால்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்துக்கு நடிகர் விஜய் கேட்டது போல 90 சீட், துணை முதல்வர் பதவி கொடுத்திருந்தால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்துக்கே பங்கம் வந்திருக்கும். இவ்வாறு ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார்.
யார் இந்த ஆடிட்டர் குருமூர்த்தி?
தொழில்முறையில் ஆடிட்டரான குருமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்; பாஜகவின் தீவிர ஆதரவாளர். அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளாக பிளவுபட்ட போது இருதரப்பும் ஆடிட்டர் குருமூர்த்தியின் உதவியை நாடி இருந்தன. அப்போது, அதிமுகவின் தலைவர்களை ஆண்மை இல்லாதவர்கள் என கடுமையாக விமர்சித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி. அண்மையில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு போய் சந்தித்தார். தற்போது அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உருவானதில் ஆடிட்டர் குருமூர்த்தி முக்கிய பங்கு வகிக்கிறார் எனவும் கூறப்படுவது உண்டு. சோ ராமசாமி நடத்திய துக்ளக் பத்திரிகையின் தற்போதைய ஆசிரியராகவும் ஆடிட்டர் குருமூர்த்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications