டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்டா இருக்கே... சுயேச்சை இளைஞரை ஆதரிக்கப் போவதாக விஷால் அறிவிப்பு!
ஆர்.கே.நகரில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சுயேச்சை இளைஞரை ஆதரிப்பேன் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
சென்னை : ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சுயேச்சை இளைஞரை ஆதரித்து வெற்றியடையச் செய்வேன். நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நடிகர் விஷால் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் அதிகாரி என்னுடைய மனு ஏற்கப்பட்டதாக சொன்னதற்கான வீடியோ என்னிடம் ஆதாரம் உள்ளது. அவர் அறிவித்ததை கேட்டு அனைவரும் கைதட்டி வரவேற்றனர். மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் இத்தனை சிக்கல்கள் இருக்கும் என்று நினைக்கவில்லை.
படத்தில் நடப்பது போல நிமிடத்திற்கு நிமிடம் திருப்பங்கள் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் இது தான் கதியா? ஜனநாயக நாட்டில் சுயேச்சை வேட்பாளர் போட்டியிடக் கூடாதா?
கடந்த முறை பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் நிறுத்தப்பட்டது, இந்த முறை ஆட்களையே தூக்கும் அளவிற்கு கீழ்த்தரமாக போயுள்ளது. டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்டாக இன்று நடந்துள்ளது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எதற்காக என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டது என புரியவில்லை.
என்னைக் கண்டு ஏன் அச்சப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்று எனக்கு தெரியவில்லை. வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்படும். முன்மொழிந்தவரை மிரட்டியது மதுசூதனன் ஆட்களா என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்.
முன்மொழிந்தவர்கள் இரண்டு பேரின் வீட்டின் முன்பு ஆளும்கட்சியின் ஆட்கள் இருந்து கொண்டு மிரட்டுகின்றனர். சுயேச்சையாக போட்டியிடும் இளைஞர் ஒருவரை ஆதரித்து அவரை வெற்றியடையச் செய்வேன். நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வேன்.
இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications