சினிமா சவப்பெட்டியின் மீதுதான் எத்தனை ஆணிகள்.. விவேக் ஆவேசம்
சென்னை: சினிமா சவப்பெட்டியின் மீதுதான் எத்தனை ஆணிகள் என்று ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து விவேக் வேதனை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்கும் வகையில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முதன்மையானதாக திகழும் தியேட்டர்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தமிழக அரசு கேளிக்கை வரியாக 30 சதவீதம் விதித்துள்ளது. இதனால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் 58 சதவீதம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் நேற்று முதல் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் திருட்டுவிசிடி, டவுன்லோடிங், யார் யாரோ செய்யும் விமர்சனங்கள், டிக்கெட் ரேட், இப்போது, வரி - சினிமா சவப்பெட்டியின் மீதுதான் எத்தனை ஆணிகள்.
உச்ச நட்சத்திரங்களும், பெரும் தயாரிப்பாளர்களும் சினிமாவரியை எதிர்த்து குரல் கொடுக்காவிட்டால், சிறு தயாரிப்பாளரின் குரல்வளை நெறிக்கப்படும் என்று விவேக் கூறியுள்ளார்.