இளைய தலைமுறையின் வாக்குகளே இனி ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும்- பாலகிருஷ்ணன்
இளைய தலைமுறையின் வாக்குகளே ஆட்சியைத் தீர்மானிக்கும் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்: நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் அரசியல் கட்சிகளின் வாக்குகள் சிதறும். புதிய இளைய தலைமுறை தான் அடுத்த கட்ட அரசியலைத் தீர்மானிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய செயலாளராக கே.பாலகிருஷ்ணன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவருக்கு திருவாரூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அவர் பேசுகையில், காவிரி நதி நீர் பிரச்சினையில் அனைத்து கட்சி ஒன்றிணைந்து குரல் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளிலும், உரிமைகளிலும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமானது.
தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அப்படி வருபவர்களை ஏற்றுக்கொள்வது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
கமல் அரசியலுக்கு வந்திருப்பது வரவேற்கத்தது. மக்கள் பிரச்னைகள் மக்களோடு மக்களாக நின்று அவர் இயங்க வேண்டும். உடனடியாக முதல்வர் கனவு காண்பது ஆபத்தானது.
நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளின் வாக்குகள் சிதறும் வாய்ப்பு உள்ளது.
இனி வரும் காலங்களில் புதிய தலைமுறையின் ஆதரவும் வாக்குகள் தான் ஆட்சி அமைக்கப்போகிறவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும். அதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.